கரோனா : மதுரை சுற்று வட்டாரப் பகுதிகளில் இரண்டு நாட்கள் மருத்துவ முகாம்!
#முதல்நாள் மருத்துவ முகாமில்… (06/08/2020)
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளை சார்பாக கரோனா தடுப்பு ஹோமியோபதி மருந்து ஆர்சனிக்கம் ஆல்பம் 30 மதுரை நகர் சுற்று வட்டார ஊர்களில் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
கரோனா நோய்த் தொற்று மதுரை நகர்ப் பகுதிகளில் பரவி வருகிறது. மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு ஆர்சனிக்கம் ஆல்பம் 30 மருந்தினை மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்த மருந்து நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தும் என்று மக்களிடம் பலத்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் அதை விரும்பிக் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது மருந்துக் கடைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ம.உ.பா.மையம் மதுரை மற்றும் சென்னையில் சில தன்னார்வலர்களுடன் இணைந்து பல ஆயிரம் பயனாளிகளுக்கு வழங்கி வருகிறோம்.
தற்போது மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து இன்று மதுரை நகர் சுற்றுவட்டாரத்தில் சுமார் 10 ஆயிரம் பயனாளிகளுக்கு மருந்து வழங்கப்பட்டது.
கல்லூரி முதல்வர் மரு.கார்த்திகேயன் அவர்களின் பரிந்துரைப்படி பேரா.அரிகரன் அவர்கள் 3000 மருந்து குப்பிகள் (container) (ஒரு குப்பி மருந்தை 6 பயனாளிகள் உட்கொள்ளலாம்) வழங்கியும் மரு.முருகேசன், மரு.திருவரங்கன் ஆகிய இரண்டு மருத்துவர்களை அனுப்பியும் உதவினர்.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளை துணைத் தலைவர் வழக்கறிஞர் பா.நடராஜன் அவர்களது பொறுப்பில் விளாச்சேரி ஊராட்சிமன்றத் தலைவர் திரு.முருகன் அவர்கள் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் முகம்மது பிச்சை அவர்களது முன்னிலையில் இன்று காலை 10 மணிமுதல் 2 மணிவரை விளாச்சேரி, மகாலட்சுமி காலனி, மொட்டமலை, திருநகர், அக்கிரகாரம், 5-வது வார்டு பகுதிகளில் 6000 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
பிற்பகல் 4-00 மணியளவில் யா.ஒத்தக்கடை சுற்றுப் பகுதிகளில் மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் திரு.சரவணன் அவர்கள் ஏற்பாட்டில் APJ அப்துல் கலாம் அபே ஆட்டோ ஓட்டுநர் உரிமையாளர் சங்கத் தலைவர் சேக் அப்துல்லா தலைமையில் 4000 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடை வெளியைக் கடைபிடித்தனர். மருத்துவர்கள் இருவரும் மருந்து உட்கொள்ளும் முறை, கொரோனாவிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை விளக்கியும் மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தும் மருந்துக் குப்பிகளை விநியோகித்தனர்.
மருந்துக்குப்பிகளை வழங்கிய திருமங்கலம் அரசு ஹோமியோ மருத்துவக் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மருந்துகளை விநியோகித்த மருத்துவர்களுக்கும் நிகழ்வுகளுக்குத் தலைமை ஏற்ற விளாச்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் முருகன், ஆட்டோ சங்கத் தலைவர் சேக் அப்துல்லா மற்றும் மக்கள் அதிகாரம் மதுரை ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் சரவணன் ஆகியோருக்கு ம.உ.பா.மையம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
#இரண்டாம் நாள் மருத்துவ முகாமில்… (07/08/2020)
மதுரை, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சோளங்குருணியில் ஊராட்சித் தலைவர் திரு.மணிராஜ் அவர்கள் தலைமையில் 1500 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. குசவன் குண்டு கிராமத்தில் திரு.பெரியகருப்பன் (PRPC) தலைமையில் 1000 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
வலையங்குளத்தில் ஊராட்சித் தலைவர் திருமதி முத்துப் பிள்ளை பெருமாள் அவர்கள் தலைமையில் முன்னாள் தலைவர் திரு வெ.பிச்சை(PRPC) அவர்கள் முன்னிலையில் பெருமாள் கோவில் அருகில் திருமண மண்டபத்திலும் வ.குளம் காலனி, 20 வீட்டுக் காலனி ஆகிய இடங்களிலும் 4000 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டது. முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைபிடித்து மருந்து வாங்கிச் சென்றனர். முகாம் தொடக்கத்தில் கொரோனா டெஸ்ட் எடுப்பதாகக் கருதி வரத் தயங்கிய மக்கள் பின்னர் ஹோமியோ மருந்து தரப்படுவதை அறிந்து சாரை சாரையாக வந்து வாங்கிச் சென்றனர். தோழர்கள் பெரிய கருப்பன், பழனிக்குமார், அய்யனார், சுப்பிரமணி ஆகியோர் முகாம் சிறப்பாக நடைபெற ஒத்துழைத்தனர்.
மாலை 5.30 முதல் 7.30 மணி வரை செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் முண்டு வேலம்பட்டி,மேட்டுப்பட்டி ஆகிய ஊர்களில் மக்கள் அதிகாரம் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் ந.குருசாமி அவர்கள் தலைமையில் தோழர் திசை கர்ணன் முன்னிலையில் 1500 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. பொழுது சாய்ந்த பின்னும் மக்கள் ஆர்வமுடன் வந்து விளக்கங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு வாங்கிச் சென்றனர்.
6,7-08-2020 ஆகிய 2 நாட்கள் நடைபெற்ற முகாம்களை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை துணைத் தலைவர் வழக்கறிஞர் பா.நடராஜன் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
அனைத்து பயனாளிகளும் மருந்தினை உட்கொண்டு நோய் எதிர்ப்பு ஆற்றல் பெற்று கொரோனாவை வெல்ல வாழ்த்துகிறோம்.
மருந்தினை இலவசமாக வழங்கி மருத்துவக் குழுவினையும் அனுப்பி உதவிய திருமங்கலம் அரசு ஹோமியோ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பொறுப்பாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் உரித்தாகிறது.
லயனல் அந்தோணிராஜ்,
செயலர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை.
7339329807



