Showing posts with label JAAC. Show all posts
Showing posts with label JAAC. Show all posts

Thursday, 17 September 2020

வழக்குரைஞர்களைப் பாதுகாக்க JAAC போராட்டம் அறிவிப்பு!!

 JAAC_பொதுக்குழு_தீர்மானம் 

தமிழ்நாடு பார்கவுன்சில் வழக்குரைஞர்களை விசாரணையின்றியும், குற்றம்சாட்டப்பட்ட வழக்குரைஞர்களிடம் எந்தவித விளக்கம் கேட்காமலும் இடைநீக்கம் செய்வதை பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

மேற்படி இடைநீக்கத்தை உடனடியாக திரும்பப் பெற பொதுக்குழு வலியுறுத்துகிறது. அவ்வாறு இடைநீக்கத்தைத் திரும்ப பெறவில்லையெனில் வரும் 22-9-2020 அன்று தமிழகம் முழுக்க நீதிமன்றங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அந்தந்த வழக்குரைஞர் சங்கங்கள் நடத்த முடிவு செய்யபடுகிறது.

அதன் பின்பும் இடைநீக்கம் திரும்ப பெறும் கோரிக்கையை பார்கவுன்சில் ஏற்காவிட்டால் 34(1) போராட்டத்தின் பொழுது நடைபெற்ற உயர்நீதிமன்றம் முற்றுகை போராட்டம் போன்று தமிழகம் முழுக்க உள்ள வழக்குரைஞர்களைத் திரட்டி தமிழ்நாடு பார்கவுன்சிலை  முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என பொதுக்குழு முடிவு செய்கிறது. 

மேலும் வழக்குரைஞர் தொழில் சம்மந்தம் இல்லாத பிரச்சனைகளில் வழக்குரைஞர்களுக்கு எதிராகத் தமிழ்நாடு பார்கவுன்சில் தலையீடு செய்யகூடாது என பொதுக்குழு வலியுறுத்துகிறது.

மேலும், நீதிமன்றத்தை உடனடியாகத் திறக்க வலியுறுத்தப்படுகிறது.

JAAC, 

தமிழ் நாடு


Monday, 24 August 2020

தமிழ்நாடு-புதுச்சேரி வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்!

19-08-2020-ம் தேதி தமிழ்நாடு புதுச்சேரி வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டுக்குழு (JAAC)  இணைய வழிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் திரு.பிரசாந்த் பூஷன் அவர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் கைவிடவேண்டுமென்றும்;

மேற்படி கோரிக்கையை வலியுறுத்தும் முகமாக 24-08-2020 ம்தேதி காலை 11 மணியளவில் அந்தந்த நீதிமன்றங்களின் முன்பாக  சமூக இடைவெளிவிட்டு ஆர்பாட்டம் நடத்துவதென்றும்; 

மேற்படி ஆர்ப்பாட்டத்தில் இணையவழி நீதிமன்றங்களுக்குப் பதிலாக திறந்த நீதிமன்றங்களில் (open court) வழக்குகளை நடத்த வலியுறுத்த வேண்டுமென்றும்,

2. குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட 5 நபர் கொண்ட குழுவை எதிர்ப்பதற்கு பிராந்தியக் குழு அமைக்கப்படும் பட்சத்தில் அதில் நமது கூட்டுக்குழு வின் உறுப்பினர்கள் இடம்பெறவேண்டுமென்றும்:

3. Contempt Of Courts Act, Judicial Officers Protection Act ஆகிய இரண்டு சட்டங்களையும் இரத்து செய்திட வேண்டுமென்றும் மற்றும்

4. ஐந்து மாதங்களாகியும் வழக்குரைஞர்களுக்கு அரசு எந்த நிவாரணமும் வழங்கவில்லை, எனவே உடனடியாக வழக்குரைஞர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்

தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

ப.நந்தகுமார் 

தலைவர் 

JAAC

மேற்கண்ட தீர்மானங்களின் ஒரு பகுதியாக 24.08.2020 அன்று பல்வேறு வழக்குரைஞர் சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். 

மதுரை


கும்பகோணம்


விருத்தாச்சலம்


உடுமலைப்பேட்டை


பத்மநாபபுரம்


திருச்சி


கோயம்புத்தூர்


நாகப்பட்டினம்


வேலூர்

தமிழ் இந்து 25.08.2020

திருவாரூர்



குழித்துறை


நாகர்கோவில்


தருமபுரி


Thursday, 30 July 2020

சட்டத் திருத்தக் குழுவைக் கலைத்திட வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்!

முப்பெரும் குற்றவியல் சட்டங்கள் திருத்தக் குழுவை கலைத்திடு!
திருத்தங்களைத் திரும்பப் பெறு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு நடத்தும் ஆர்ப்பாட்டம்.

31.07.2020  - மாவட்ட நீதிமன்றங்கள் முன்
(JAAC) ஆர்ப்பாட்டம்.

இந்திய அரசு  
இந்திய தண்டனைச் சட்டம்,  குற்றவியல் நடைமுறைச் சட்டம்,  இந்திய சாட்சியச் சட்டம் இவைகளில் மாற்றம் கொண்டுவரக் கருதுகிறது .

இதற்கு மே நான்காம் தேதி அன்று உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்துள்ளது.

குழுவில் உள்ளவர்கள். 

1. தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் Dr. ரன்பீர் சிங், தலைவர். இவர் கார்ப்பரேட் சட்டம், ஆளுமை, கார்ப்பரேட் சமூக பொறுப்பணர்வு போன்ற விஷயங்களிலும் ஆர்வமாக உள்ளவர்.  

2.  மேற்கண்ட பல்கலைக்கழகத்தின் பதிவாளர்  பாஜ்பாய், இவர் காவல்துறைக்கான (police  academy) பயிற்சியாளர். 

3.   தாரா சாஸ்திரா தேசிய பல்கலைக்கழக துணைவேந்தர் 
பால்ராஜ் சவுகான் . இவர் தர்மசாஸ்திரங்கள் அக்கடமி உறுப்பினர் .
 
4. உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி. இவர் டாடா, பிர்லா, அம்பானி போன்றவர்களின் சொத்து வழக்கு , குஜராத் கலவர வழக்கு ஆகியவைகளை நடத்துபவர். 

5.  டெல்லி முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி ஜிபி ரோஜா. இவர் வேதியியல் துறைசார்ந்து மட்டுமே அனுபவம் உள்ளவர்.

இக்குழுவில் மேற்கண்ட ஐந்து நபர்கள் உட்பட மொத்தம் 30 நபர்கள் உள்ளனர்.
28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் உட்பட மொத்தம் 36 மாநிலங்களை உள்ளடக்கியது இந்திய ஒன்றியம். 

இந்திய அரசு கொண்டு வருகின்ற குற்றவியல் சட்டத் திருத்தக் குழுவில் மேற்குறிப்பிட்ட  எந்த மாநிலங்களுக்கும் எந்த ஒரு பிரதிநிதித்துவமும் இல்லை.
முதலில் இந்தக் குழுவின் தன்மையே கேள்விக்குறியாக உள்ளது. 
இரண்டாவது மாநிலத்தின் உரிமையை மறுப்பது. இதனால் இவை முற்றிலும் ஜனநாயக விரோதமானது. 

யாருக்கு அதிகாரம் உள்ளது?

மேற்கண்ட சட்டத்தில் திருத்தம் செய்வது சட்டத்துறையைச் சார்ந்தது .
ஆனால் அமித்சாவை அமைச்சராகக் கொண்ட உள்துறை அமைச்சகம்  இந்த திருத்தங்களை செய்ய முன்வந்திருப்பது சரியானது அல்ல. 

மூன்றாவது இவ்வளவு பெரிய சட்டங்களுக்குக் கருத்து கூற மூன்று மாதங்கள் மட்டுமே கால அவகாசம் கொடுப்பது சரியானது அல்ல. இறுதிநாள் 09.10.2020 .

வெகுமக்கள் மற்றும் பிற அமைப்புகள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கருத்துக்கூற வழியில்லை. வெகுமக்களைச் சேர்க்க எந்த முயற்சியும் இல்லை. ஆகவே இக்குழு கலைக்கப்பட்டு சட்டத் திருத்தங்களுக்கான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். 

சட்டத்திருத்தம் தொடர்பாக கேட்கப்பட்டுள்ள  மொத்த வினாக்கள் 89.

I.P.C, Cr.P.C, Evidence Act ஆகிய சட்டங்கள் உள்ளடக்கிய 68 சட்டங்களில் மாற்றம் கொண்டு வர உள்ளனர்.  

1.காவல்துறைக்கு முழு அதிகாரம் வழங்குதல்

2. புலனாய்வு அறிக்கை சீல் செய்யப்பட்டு சமர்ப்பித்தல் 

3.அனைத்து சட்டங்களையும் சுமையாக மாற்றுவது

 4. யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாக்கி அவர்களின் குற்றங்களை தடுப்பது என்ற பெயரில் அவர்கள் மீது தடுப்புச் சட்டங்களை ஏவுவது 

5. குற்ற மனப்பான்மை இருக்கிறதா என்பதை கணக்கில் கொள்ளத் தேவை இல்லை

6. தேடுவதற்கான ஆணை இல்லாமல், சர்ச் வாரண்ட் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும்  கைது செய்யலாம்

என  இன்னும் பல ஜனநாயக விரோத திருத்தங்களை இக்குழு பரிந்துரைக்கிறது.

எனவே இவை மக்கள் விரோதமானது இதை முற்றாக நிராகரிக்கின்றோம்.

சி.முருகேசன்
இணைச் செயலர்
JAAC

ஆர்ப்பாட்ட முழக்கங்கள்:

வழக்கறிஞர்கள் ஒற்றுமை - ஓங்குக!

கைவிடு! கைவிடு!
குற்றவியல் நடைமுறைச்சட்டம் 
இந்தியச் சாட்சியச்சட்டம் 
இந்திய தண்டனைச்சட்டம் 
ஆகியவற்றில் மேற்கொள்ளவிருக்கும் 
சட்டத்திருத்தத்தைக் கைவிடு!
மத்தியஅரசே கைவிடு!

கலைத்திடு! கலைத்திடு!
கிரிமினல்சட்டங்களை திருத்திஅமைக்க 
உருவாக்கிய ஐவர்குழுவை 
உடனடியாகக் கலைத்திடு!
மத்தியஅரசே கலைத்திடு!

போலீசையே நீதிபதிகளாக்கும்
கிரிமினல்சட்டத் திருத்தத்தைக்
கைவிடு! கைவிடு!
மத்தியஅரசே கைவிடு!

திறந்திடு! திறந்திடு!
கரோனாவைக் காரணம்காட்டி
மூடிக்கிடக்கும் நீதிமன்றங்களை
உடனடியாகத் திறந்திடு!

பறிக்காதே! பறிக்காதே!
கரோனாவைக் காரணம்காட்டி
நீதிமன்றங்களை பூட்டிவைத்து
வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்தைப் 
பறிக்காதே! பறிக்காதே!

காவல்நிலையங்கள் இயங்கும்போது 
நீதிமன்றங்கள் இயங்கினால்என்ன? 
கலெக்டர்ஆபீஸ் இயங்கும்போது 
கோர்ட்டுகள் இயங்கினால்என்ன? 

ஊரெங்கும் சாராயக்கடைகள் 
அலைமோதும் குடிகாரர்கள் 
அதற்கெல்லாம் வராதகரோனா
நீதிமன்றங்களைத் திறந்தால்மட்டும் 
வந்துவிடுமா? வந்துவிடுமா?
கரோனா வந்துவிடுமா?

வழக்குஇல்லை விசாரணைஇல்லை 
வேலைஇல்லை வருவாய்இல்லை
வஞ்சிக்காதே! வஞ்சிக்காதே!
வழக்கறிஞர்களை  வஞ்சிக்காதே!

துப்புறவுப் பணியாளர்கள் 
செவிலியர்கள் மருத்துவர்கள் 
அரசுஊழியர் அலுவலர்கள் 
தைரியமாக இயங்கும்போது 
நீதிமன்றங்களால் முடியாதா?

நீதிமன்றங்கள் இயங்குவது 
அரசியலமைப்புச் சட்டப்படியா?
ஒருசிலரின் விருப்பப்படியா?
அனுமதியோம்! அனுமதியோம்! 
நீதிமன்றங்கள் பூட்டிக்கிடப்பதை
அனுமதியோம்! அனுமதியோம்!

கைதுசெய்ய போலீஸ்வருது 
ரிமாண்ட்செய்ய நீதிபதிவாரார் 
பெயில்எடுக்க வக்கீல்மட்டும் 
நேரில்வந்தால் கரோனாவருமா? 
என்னங்கடா நியாயமிது?

வெட்கக்கேடு! வெட்கக்கேடு!
ஜனநாயகம் பேசும்நாட்டில் 
ஐந்துமாதமாய் நீதிமன்றங்கள் 
பூட்டிக்கிடப்பது வெட்கக்கேடு!
திறந்திடு! திறந்திடு! 
நீதிமன்றங்களைத் திறந்திடு!

நெட்வொர்க்இல்லா ஊரிலே 
வெண்ணைவெட்டவா வெர்ச்சுவல்கோர்ட்டு?
இழப்பீடுவேண்டாம் லோனும்வேண்டாம் 
நீதிமன்றங்களைத் திறந்திடு
வேலைசெய்து பிழைக்கத்தெரியும்!

மறுக்காதே! மறுக்காதே! 
கரோனாவைக் காரணம்காட்டி 
நீதிமன்றங்களைப் பூட்டிவைத்து 
சட்டபூர்வ நிவாரணம்தேடும் 
பொதுமக்களுக்கான நீதியை 
மறுக்காதே! மறுக்காதே!



















Sunday, 26 July 2020

நீதிமன்றங்களைத் திறக்கக்கோரி திருச்சி வழக்குரைஞர்கள் போராட்டம்!

நீதிமன்றங்களைத் திறக்கக் கோரியும், ஊரடங்கை முழுமையாக நீக்கக் கோரியும் திருச்சி வழக்குரைஞர்கள் போராட்டம்





Thursday, 23 July 2020

போராட்டக்களத்தில் தமிழக வழக்குரைஞர்கள்!

அன்புடையீர் வணக்கம்!

22.07.2020 ஆம் தேதி (புதன்கிழமை) நமது கூட்டுக்குழுவின் பொதுக்குழுக்கூட்டம்  மாலை 5 மணியளவில் ' Google Meet' என்ற இணைய வழியாக நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் முன்னாள்  தலைவர் திரு. P. திருமலைராஜன் அவர்களும், முன்னாள் பொதுச்செயலாளரும், பார்கவுன்சில் உறுப்பினருமான திரு. MRR. சிவசுப்பிரமணியன் அவர்களும் கலந்து கொண்டனர். 

கரோனா பெருந்தொற்றின் காரணமாக ஊரடங்கு அமுலில் உள்ள நிலையிலியிலும் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களைக் கூறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை தெறிவித்துக்கொள்கிறேன். மேற்படி கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் செய்வதற்காக மத்திய உள்துறை  அமைச்சகம் Dr.Ranbir Singh அவர்கள் தலைமையில் அமைத்த 5 பேர் கொண்ட குழுவினை கலைத்திட வேண்டுமென்றும்;

2. மேற்படி குழு அமைக்கப்பட்டதற்கு நமது கூட்டுக்குழுவின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் ஒரு அறிக்கையினை அந்தக் குழுவிற்கு அனுப்பிவைப்பதென்றும்; 

3. கரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் மத்திய அரசு மேற்படி 5 பேர் கொண்ட குழுவினை அமைத்து குற்றவியல் சட்டங்களில் அடிப்படைத் தன்மையை மாற்றி அமைக்கும் விதமாக திருத்தங்கள் கொண்டுவர முற்படுவதால் அதனைத் தடுக்கும் பொருட்டு நாடு தழுவிய மிகப்பெரிய போராட்டம் நடத்தவேண்டியுள்ள நிலையில், அப்படிப்பட்ட  போராட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல தலைவர் தலைமையில் கீழ் கண்ட 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

1. திரு. ப. நந்தகுமார் ( தலைவர், கோவை)

2. திரு. O. சகாபுதீன் ( பொதுச்செயலாளர், திருச்சி)

3. திரு. R. மகேஷ் (பொருளாளர், நாகர்கோவில்)

4. திரு.P. திருமலைராஜன்
(முன்னாள் தலைவர், ஈரோடு)

5. திரு. MRR. சிவசுப்பிரமணியன்
( முன்னாள் பொதுச்செயலாளர்,மற்றும்  பார்கவுன்சில் உறுப்பினர், தஞ்சாவூர்)

6. திரு. V.K. சுப்பிரமணியன்
( துணைத்தலைவர்,  அவினாசி)

7. திரு. தமிழ் இராஜேந்திரன்
 ( அட்வகேட், கரூர்)

8 திரு. கண்ணன்
( துணைத்தலைவர், திருவண்ணாமலை) மற்றும்

9. திரு. செந்தில்குமார்
( துணைத்தலைவர், திருநெல்வேலி 

4. நான்கு மாதங்களாக மூடப்பட்ட நிலையில் உள்ள நீதிமன்றங்களைத் திறக்க வேண்டுமென்றும்,
குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்த 5 பேர் கொண்ட குழுவினை கலைத்திட வேண்டுமென்றும்,  அதனை வலியுறுத்தும் வகையில்
31.07.2020 ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் அந்தந்த நீதிமன்றங்களின் முன்பாக தனி மனித இடைவெளிவிட்டு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடுத்துவதென்றும்.
ஏகமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ப. நந்தகுமார்
தலைவர்
JAAC

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் திருவண்ணாமலை