Tuesday, 28 June 2022

தீஸ்தா செதல்வாத் கைது! சட்டத்தின் ஆட்சி மீதான பாசிசக் காவி புல்டோசர் தாக்குதல்!

2002 கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் மிகப் பெரிய கலவரத்தைத் திட்டமிட்டு நடத்தி, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களைப் படுகொலை செய்தது ஆர்எஸ்எஸ்-பாஜக உள்ளிட்ட சங் பரிவாரக் கும்பல்.  

இந்தப் படுகொலைக்கு எதிராக நாடெங்கிலும் பரவலாகக் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்ட அதேவேளையில், பிரபல சமூக செயல்பாட்டாளரும் வழக்கறிஞருமான தீஸ்தா செதல்வாத், மோடி உள்ளிட்ட குற்றவாளிகளை தண்டிக்கக் கோரி  நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார். மோடி உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இல்லை என உச்ச நீதிமன்றம் நியமித்த ‘சிறப்பு விசாரணைக் குழு' அளித்த அறிக்கைக்கு எதிராக மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடிய போது, வழக்கைத் தள்ளுபடி செய்கிறது உச்ச நீதிமன்றம்.

வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்ட அடுத்த 24 மணி நேரத்திற்குள், தீஸ்தா செதல்வாத் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இந்த வழக்குக்கு ஆதரவாகச் செயல்படும் முன்னாள் டிஜிபி ஆர்.பி. ஸ்ரீகுமார் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோர் மீது, இந்த வழக்கில் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி, போலியானத் தகவல்களை அளித்து, ஒரு சிலருக்கு மரண தண்டனை பெறும் நோக்கத்தோடு தவறான சாட்சியங்களைக் கொடுத்து, ஏமாற்றும் நோக்கத்தோடு செயல்பட்டதாக பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வழக்கு தொடுத்துள்ளது குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு.

மதவாத, அரசு பயங்கரவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக, நீதி கேட்டுப் போராடும் சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமைப் போராளிகளுக்கு இது ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை மணி. எத்துணை கொடூரங்கள் நடந்தாலும் அதற்கு எதிராக யாரும் நீதி கேட்டு நீதிமன்றத்திற்கு வரக்கூடாது என்கிறது மோடி அரசு. இது போன்ற வழக்குகளால் மனித உரிமைப் போராளிகளை நசுக்குவதன் மூலம் மதவாத மற்றும் அரசு பயங்கரவாத கும்பல்கள் அப்பாவி மக்களை சித்திரவதைக்குள்ளாக்கவும் படுகொலை செய்யவும் வழிவகை செய்கிறது.

தீஸ்தா செதல்வாத்

உத்திர பிரதேசத்தில் சங்பரிவாரக் கும்பலுக்கு எதிராகப் போராடியவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்ததும், தீஸ்தா சேதல்வாத் கைதும் வேறு வேறு அல்ல. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அறிவித்துள்ளபடி, வருணாசிரம இந்து சாம்ராஜ்யத்திற்கான வாகனம் வேகமெடுத்து முன் செல்கிறது. இதைத் தடுக்க முனைவோர் அகற்றப்படுகிறார்கள்; இனியும் அகற்றப்படுவார்கள். தீஸ்தா சேதல்வாத்தின் கைது இதைத்தான் உணர்த்துகிறது. 

குஜராத் இனப்படுகொலைக்கு எதிராக நீதி கேட்டது குற்றமா? சட்டத்தை நம்பி, நீதிமன்றங்களை  நாடினால் நீதிக்காகப் போராடுவோரை உச்சநீதிமன்றமே சிறைக்கு அனுப்பத் துணை நிற்கிறது. இது என்ன நாடா அல்லது காடா? முசோலினி, ஹிட்லர் ககாலத்திலகூட நடக்காத அநீதிகள் இந்தியாவில் அரங்கேறுகின்றன. 

சமூக செயல்பாட்டாளர்களும், மனித உரிமைப் போராளிகளும், வழக்குரைஞர்களும் முடக்கப்பட்டு விட்டால் வஞ்சிக்கப்படும் மக்களுக்கு நாதி ஏது? 

தீஸ்தா செதல்வாத் கைது மற்றும்  ஸ்ரீகுமார், சஞ்சீவ் பட் ஆகியோருக்கு எதிரான வழக்கை முறியடிக்கக் குரல் கொடுப்போம்!

படர்ந்து வரும் பார்ப்பன பாசிச பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைவோம்!

சமூக செயல்பாட்டாளர்களையும், மனித உரிமைப் போராளிகளையும், வழக்கறிஞர்களையும் பாதுகாக்க அணியமாவோம்!

வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்
மாநில ஒருங்கிணைப்பாளர் 
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தமிழ்நாடு

நாள்: 28.06.2022
மதுரை

Saturday, 28 May 2022

அண்ணாமலை மீது அவதூறு வழக்குப் போடு!

அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினார். அதன் பிறகு மு க ஸ்டாலின் அவர்களின் உரை குறித்து பேட்டி அளித்த பா.ஜ.க தலைவர், செய்தியாளர்களை மிகவும் இழிவுபடுத்தி அவதூறாகப் பேசி உள்ளார். எனவே அண்ணாமலை மீது அவதூறு வழக்குத் தொடுக்க வேண்டும் எனச் சாடுகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள்.

பாருங்கள்! பகிருங்கள்!!


நன்றி: அரண் செய்

Thursday, 19 May 2022

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: சிபிஐ விசாரணை அறிக்கை ஒரு மோசடி!

தூத்துக்குடியை மாசுபடுத்தும்  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய 100 நாள் போராட்டத்தில் அன்றைய எடப்பாடி அதிமுக அரசு காவல்துறையை ஏவி போராடும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 15 பேரை படுகொலை செய்தது. 

துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்திய மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணை அறிக்கையை தற்போது தாக்கல் செய்துள்ளது. குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டிய காவல்துறையினரை சாட்சிகளாகவும், சாட்சிகளாக இருக்க வேண்டிய பொதுமக்களை குற்றவாளிகளாகவும் சிபிஐ யின் புலனாய்வு அறிக்கை கூறுகிறது. 

இந்த அறிக்கையை முற்றிலும் நிராகரிப்பதாகவும், நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் புதிய புலனாய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு  சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்த கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு.




Tuesday, 10 May 2022

ராஜபக்சே நிலைமை மோடிக்கும் வரும்!

இனவெறியைக் கையில் எடுத்துக் கொண்டு இலங்கையை சின்னாபின்னமாக்கிய ராஜபக்சேவுக்கு நேர்ந்த கதிதான், மதவெறியைக் கையிலெடுத்துக் கொண்டு இந்தியாவை சின்னாபின்னமாக்கி வரும் மோடிக்கும் நேரும்! 

இது ஆரூடம் அல்ல. மோடியின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை எடை போட்டு ஆதாரத்தோடு அலசுகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள்! பகிருங்கள்! 

நன்றி: அறக்கலகம்

Sunday, 8 May 2022

ஆதீன சர்ச்சை: பழைய மரபு என்றால் தமிழிசை மேலாடை அணிய முடியுமா?

தருமபுர ஆதீனத்தின் பட்டனப் பிரவேசம் குறித்த சர்ச்சை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. பார்ப்பன ஆர்எஸ்எஸ் சங் பரிவாரக் கும்பல் இந்தப் பிரச்சினையை ஊதிப் பெருக்கி வருகிறது.

பல்லக்கில் சுமப்பதே சட்டப்படி குற்றம்; விளாசுகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். அறக்கலகம் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டி. பாருங்கள்! பகிருங்கள்!



Friday, 6 May 2022

தருமபுர ஆதீனம்! இறைவனுக்குச் சமமானவரா?

தர்மபுர ஆதீனம் இறைவனுக்குச் சமமானவரா?

கடவுளைச் சுமக்கும் பல்லக்கில், மடாதிபதியை சுமக்க வேண்டுமா?

ஆன்மீகத்தில் மதவெறியைக் கலந்து தமிழகத்தின் பொது அமைதியை சீர்குலைக்க முயலும் மன்னார்குடி ஜீயரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!

பட்டனப் பிரவேசத்தை தடை செய்த தமிழக அரசை அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்   மனதாரப் பாராட்டுகிறது!

தமிழக அரசின் செயல் சரியான சமத்துவ இறைப்பணி என்று போற்றுகிறது!

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு

(TAMILNADU ASSOCIATION FOR TRAINED ARCHAKAS)

128, கோகுலம் இல்லம், அரசமரத் தெரு திருவண்ணாமலை மாவட்டம்

90474 00485.

+++++++++++++++++

பத்திரிக்கை செய்தி

நாள் : 06.05.2022

தர்மபுர ஆதீனம் இறைவனுக்குச் சமமானவரா?

கடவுளைச் சுமக்கும் பல்லக்கில், மடாதிபதியை சுமக்க வேண்டுமா?

ஆன்மீகத்தில் மதவெறியைக் கலந்து தமிழகத்தின் பொது அமைதியை சீர்குலைக்க முயலும் மன்னார்குடி ஜீயரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!

பட்டனப் பிரவேசத்தை தடை செய்த தமிழக அரசை அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்   மனதாரப் பாராட்டுகிறது!

தமிழக அரசின் செயல் சரியான சமத்துவ இறைப்பணி என்று போற்றுகிறது!

----------

குன்றக்குடி ஆதீனம் முதல் தமிழகத்தின் அனைத்து ஆதீனங்களும், காலத்துக்கும்,கடவுளுக்கும் ஒவ்வாதது என்று கைவிட்ட , பட்டனப் பிரவேசம் என்ற மனிதனை, மனிதன் தூக்கும் பல்லக்கு மரபை மீண்டும் கையிலெடுத்து தமிழகத்தின் சமத்துவ மரபுக்கு எதிராக நிற்கிறார் தருமபுரி ஆதீனம்.சைவம், தமிழ் என்று பேசும் தர்மபுர ஆதீனம் சிதம்பரம் நடராசர் கோயிலில்  கடந்த 13 ஆண்டுகளாக  நடந்துவரும், தமிழில் தேவாரம், திருவாசகம் பாடும் போராட்டத்தை ஒரு நாளும்  ஆதரிவிக்கவில்லை.

தேவாரம், திருவாசகம், தமிழுக்காகப் பேசவில்லை என்பது மட்டுமல்ல, குமூடிமலை சிவனடியார் ஆறுமுகசாமியை , சிதம்பரம் தீட்சிதப் பார்ப்பனர்கள் தாக்கிபோதும் மவுனம் காத்தவர்தான் தருமபுரி ஆதீனம். ஆதீனத்திற்கு கட்டுபட்ட வைத்தீசுவரன் கோயில் உட்பட எந்தக் கோயிலிலும் தமிழில் குடமுழக்கு செய்ததில்லை. சமஸ்கிருதத்தையே ஆதரித்து, பயன்படுத்தி வருகிறார். 

தமிழகத்தில் உள்ள சைவ வேளாளர் உள்ளிட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டி, தொடர்ந்து 50 ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட மக்கள் போராட்டத்தை இவர் கண்டுகொண்டதில்லை. தமிழ் மக்களின் பணத்தில் வாழும் தருமபுரி ஆதீனம்,தமிழக மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆளுநர் கே.என்.இரவியை மடத்துக்கு அழைத்து விழா நடத்துகிறார். தொடர்ந்து ஆளுநருக்கு பாதுகாப்பில்லை என பிரச்சாரம் செய்யப்படுகிறது.மதுரை ஆதீனம் ஆளுங்கட்சியினருக்கு எதிராக பா ஜ க ஆதரவு இராம ரவி வர்ம குமார், இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து பேசுகிறார்.

தொடர்ந்து மன்னார்குடி ஜீயரான செண்டலங்கார ஜீயர், "பல்லக்குத் தூக்குவதைத் தடுத்தால் தமிழ்நாட்டு அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் நாட்டில் நடமாட முடியாது" என மிரட்டுகிறார். ஆதீனங்கள் - பா ஜ க - ஆளுநர் ஆதரவு - திராவிட இயக்க எதிர்ப்பு  ஆன்மீகத்தில் மதவெறி அரசியலைக் கலப்பதாகும். தமிழகத்தின் பொது அமைதியை சீர்குலைக்க முயலும் 

மன்னார்குடி ஜீயரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

ஆளுநர் மீதான மக்களின் எதிர்ப்பை திசைதிருப்பும் விதமாகவே பா ஜ க தலைவர் அண்ணாமலையும், ஹெச்.ராஜாவும் , பட்டனப் பிரவேச பிரச்சனையை வைத்து தமிழக அரசிற்கு எதிராகப் பேசுகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழக அரசு, சைவத்திற்கு எதிரானது போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்க ஆதீனமும் - பா ஜ க-வும் இணைந்து  முயற்சிக்கிறார்கள்.உண்மையில் ஆன்மீகத்தில் சமத்துவத்தை உருவாக்கி, ஆன்மீகத்தை காத்தது திராவிட அரசு.

கோயிலில் அனைத்து சாதி தமிழர்களை அழைத்துச் சென்றது முதல் கருவறையில் பூஜை செய்ய வைத்தது வரையிலான வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியது திராவிட இயக்கம்தானே தவிர எந்த மடாதிபதியும் அல்ல. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட  சைவர்கள், இந்துக்களின் வழிபாட்டு, பூசை உரிமைகளுக்கு  தருமபுரி ஆதீனம் என்றாவது பேசியுள்ளாரா? 206 அனைத்து சாதி அர்ச்சக மாணவர்கள் ஆகமம், வேதம், தேவாரம், திருவாசகம் , மந்திரங்கள் கற்று, தீட்சை வாங்கி, சான்றிதழும் பெற்று 2007 முதல் 2021 -ல் தி.மு.க ஆட்சி வரும்வரை 15 வருடங்கள் சாதியால் பணி மறுக்கப்பட்டு தெருவில் நின்றோமே, அப்போதெல்லாம் தர்மபுர ஆதீனம் எங்கே சென்றார்? லிங்காயத் என்ற வீர சைவ மதத்தை உருவாக்கிய கர்நாடகாவின் மாபெரும் ஆன்மீக புரட்சியாளர் பசவண்ணா அவர்களே பல்லக்கில் மனிதனை, மனிதன் சுமப்பதை எதிர்த்துள்ளார். 

பசவண்ணா, குன்றக்குடி ஆதின கர்த்தரை விட தர்மபுர ஆதீனம் பெரியவரா? 

தமிழுக்கும், சைவத்துக்கும் அவர் ஆற்றிய தொண்டு என்ன?

பட்டனப் பிரவேசத் தடை என்பது, ஆன்மீக நடவடிக்கை அல்ல.அரசியல் சட்ட நடவடிக்கை. இறைவன் விரும்பும், மனித நேய , சமத்துவ நடவடிக்கை. அரசியல் சட்டப்படி, தனிமனிதனின் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டிய அரசியல் சட்டக் கடமை தமிழக அரசுக்கு உண்டு. தேவதாசி முறை, உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், மனிதக் கழிவை மனிதனே அகற்றல்,கை ரிக்‌ஷா ஒழித்தல் போன்ற அரசியல் சட்ட விரோத நடவடிக்கை போன்றதே மனிதனை, மனிதன் சுமக்கும் பல்லக்கு தூக்கும் நிகழ்வு.எனவே பட்டனப் பிரவேசத் தடை சரியான நடவடிக்கையே.கடந்த 2010-ஆம் ஆண்டில் சிறீரங்கம் அரங்கநாதன் கோயிலில் பிரம்மரதம் என்ற பல்லக்கு நிகழ்வை கோயிலின் இணை ஆணையர் திரு.ஜெயராமன் அவர்கள் தடைசெய்தது, சரியான நடவடிக்கை என வேத வியாச லட்சுமி நரசிம்ம பட்டர் வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

நீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டியது தமிழக அரசின் அரசியல் சட்டக் கடமை. எனவே , முற்றும் துறந்தவர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் தர்மபுர ஆதீனம் அவர்கள், பட்டனப் பிரவேசம் என்ற அதிகாரத்துவ நடவடிக்கையை, மனித நேயமற்ற, கண்ணியக் குறைவான, அரசியல் சட்ட விரோத செயலை உடனே கைவிட வேண்டும் என்றும், ஆன்மீகத்தில் பார்ப்பனீய அரசியலைக் கலந்து, அமைதிப் பூங்காவான தமிழகத்தை சிதைக்க வேண்டாமென கேட்டுக் கொள்கிறோம்.

இறைவன் விரும்பியபடி சமத்துவ ஆன்மீகத்தை தொடர்ந்து நிலைநிறுத்தும் தமிழக முதல்வர் அய்யா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்  என்றும் துணை நிற்கும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

வா.ரங்கநாதன், தலைவர், 

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு

தொடர்பு எண்: 9047400485

ஆர்எஸ்எஸ் பிடியில் ஆதீனம்! பெரும் கலவரத்திற்குத் திட்டம்!

தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசம் தடை செய்யப்பட்டது குறித்து எழுந்துள்ள சர்ச்சை குறித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் வாஞ்சிநாதன் அவர்களுடன் ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் அவர்கள் நடத்திய நேர்காணல்.

பாருங்கள்! பகிருங்கள்!



Friday, 18 February 2022

சிதம்பரம் நடராசர் கோவில் என்ன தனி நாடா?

ஒரு சிறுபான்மை பார்ப்பனக் கூட்டம் புரோகிதர் என்ற பெயரில் கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டு இந்து பக்தர்களை இழிவு படுத்துவதோடு, அவர்களைத் தாக்கவும் செய்கிறது.  

சிதம்பரம் நடராஜர் கோவில்  சிற்றம்பல மேடையில் அண்மையில் ஒரு பெண் பக்தர் தேவாரம் பாடச் சென்ற போது சாதியைச் சொல்லி இழிவுபடுத்தி, அவமானப்படுத்தி தாக்கியிருக்கிறது பார்ப்பன தீட்சதர் கூட்டம்.

சிதம்பரம் நடராசர் கோயில் என்ன தனி நாடா? எனக் கேள்வி எழுப்பி பார்ப்பன தீட்சிதர்களின் கொட்டம் அடக்க அறைகூவல் விடுக்கிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள் பாருங்கள். பகிருங்கள்.

நன்றி: Arakalagam tv

இந்துப் பெண் பக்தரைத் தாக்கியப் பார்ப்பன தீட்சிதர்களைக் கைது செய்யக்கோரி மதுரை வழக்கறிஞர்கள் நடத்தியப் போராட்டம். காட்சிகள்.


நன்றி:Arakalagam tv



Wednesday, 9 February 2022

ஹிஜாப்: பார்ப்பனியத்தை அடித்து நொறுக்கு!

ஹிஜாப்: இஸ்லாமியப் பெண்கள் கல்லூரிக்கு பர்தா அணிந்து வரக்கூடாது என பார்ப்பன ஆர்எஸ்எஸ் காவிக் கும்பல் தலைமையிலான பாஜக அரசு தடை விதித்ததையடுத்து ஆர் எஸ் எஸ் கும்பல் கர்நாடகாவில் மிகப்பெரும் கலவரத்திற்கு வித்திட்டு வருகிறது. ஹிஜாப் பிரச்சனை இன்று நாடெங்கிலும் பதட்டத்தை ஏற்பத்தி உள்ளது. கலவரத்தில் ஈடுபடும் பார்ப்பன ஆர்எஸ்எஸ் கும்பலை அடித்து விரட்டாமல் இந்தியாவில் அமைதியை நிலைநாட்ட முடியாது. எனவே மனுதர்மத்தைக் கொளுத்துவதோடு பார்ப்பன காவிக் கும்பலை அடித்து விரட்ட அழைப்பு விடுக்கிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள். பகிருங்கள்.

நன்றி: அறக்கலகம்

Wednesday, 22 December 2021

பாஜகவில் நீதிபதிகள் அணி!

14.12.2021 அன்று திருச்சியில் நடைபெற்ற மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ஒன்பதாவது மாநில மாநாட்டில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள் ஆற்றிய உரை. 

00000

அனைவருக்கும் வணக்கம்,

நாடு எத்தகைய நெருக்கடியான, அபாயகரமான சூழலில் இருக்கிறது என்பதை மக்கள் உணராமல் இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன்.

ஆர்எஸ்எஸ்-பாஜகவின் ஊதுகுழலாகச் செயல்படும் யு-டியூபர் மாரிதாஸ் என்பவர் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சூழலில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவரது பிணை மனு 13.-12-2021 திங்கள் காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. எத்தனையோ வழக்குகள் வரிசையில் காத்துக் கிடக்கும் போது, இந்த வழக்கை முதல் வழக்காக எடுத்து நீதிமன்றம் விசாரிக்கிறது. முதல் தகவல் அறிக்கையின் நகல்கூட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. தமிழக அரசு இவ்வழக்கை விசாரிக்கக் கால அவகாசம் கோருகிறது. ஆனால் நீதிபதியோ, அன்றே விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறார். மாரிதாஸ் மீது புகார் கொடுத்த புகார்தாரர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர் வெளியூரில் காரில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அவரோடு ஆன்லைனிலேயே வழக்கு விசாரிக்கப்படுகிறது. தான் காரில் பயணம் செய்வதால் எதையும் சரியாக உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை என்று அவர் கூறுகிறார். அவரும் அவகாசம் கோருகிறார். ஆனால் இதை எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமலேயே மாரிதாஸ் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. தள்ளுபடி செய்யப்பட்டது மிகச் சாதாரண வழக்கு அல்ல, தேசத்துரோக வழக்கு, 124 A, IPC. வழக்கு போடப்பட்ட நான்காவது நாளிலேயே தள்ளுபடி செய்யப்படுகிறது.

ஆனால் தோழர் காளியப்பன், தோழர் கோவன், தோழர் வாஞ்சிநாதன், தோழர் ராஜு மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்குகளில் அவர்கள் சில மாதங்கள் சிறையில் இருந்து போராடிய பிறகுதான் பிணையில் வெளி வரமுடிந்தது. ஆண்டுகள் கடந்து போனாலும் இன்றும் அவர்கள் அந்த வழக்குகளுக்காக நீதிமன்ற வாசற்படிகளில் ஏறிக் கொண்டிருக்கிறார்கள்.
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட சுதா பரத்வாஜ் வரவரராவ் உள்ளிட்ட சமூகச் செயல்பாட்டாளர்கள் ஆண்டுக் கணக்கில் சிறையில் வாடுகிறார்கள். இவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளும் தேசத்துரோக வழக்குகள்தான். இவர்களால் இன்றுவரை வழக்கிலிருந்து விடுபட முடியவில்லை. ஆனால் மாரிதாஸ் மீதான வழக்கு நான்கு நாட்களிலேயே தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆர்எஸ்எஸ் - பாஜகவினர், நீதிபதிகள் அணி ஒன்றை வைத்துள்ளனர் என்பதைத்தானே இது உணர்த்துகிறது. 

இராணுவம், போலீசு, RAW, IB, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உள்ளிட்ட அரசின் அத்தனை துறைகளிலும் அவர்கள் தங்களது அணியை ஏற்கனவே உருவாக்கி விட்டனர். இதுதான் அபாயம். இந்த அபாயத்தைத்தான் மக்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

சுதா பரத்வாஜ் அவர்களுக்கு தற்போதுதான் நிபந்தனையில் பிணை கிடைத்துள்ளது. ஸ்டேன் சாமி மிகவும் உடல் நலிவுற்ற நிலையில் பிணை கோரி முறையிட்ட போதும் ஈவிரக்கமின்றி பிணை மறுக்கப்பட்டதால் அவர் சிறையிலேயே மாண்டு போனார். நீரிழிவு நோயினால் சிறுநீர் கழிக்கக் கூட சிரமப்படும் வரவர ராவ் மீதான பிணை மனு நிராகரிக்கப் படுகிறது. ஆர்எஸ்எஸ் சங் பரிவாரங்களின் ஊதுகுழலான அர்னாப் கோஸ்வாமி மீதான வழக்கு மறுபரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அவர் உடனடியாக விடுவிக்கப்படுகிறார். 

இவையெல்லாம் எதை உணர்த்துகின்றன? நடப்பது சங்க்பரிவார சனாதனிகளின் ஆட்சிதான் என்பதை உணர்த்த வில்லையா? "சனாதனம்தான் நாட்டின் பண்பாடு" என வாரணாசியில் மோடி பேசியிருப்பதைப் பொருத்திப் பாருங்கள், உண்மை புரியும்.

உரை மேலும் தொடர்கிறது. பாருங்கள்! பகிருங்கள்!



Tuesday, 21 December 2021

சீமான் ஒரு பொறுக்கியா? நாம் தமிழர் கூட்டம் ஒரு லூசுக் கூட்டமா?

மோடி தலைமையிலான பாஜக ஆர்எஸ்எஸ் கும்பல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பின்பு, பொதுத் துறைகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகின்றன; நாட்டின் கனிம வளங்கள் அதானி அம்பானி போன்ற பார்ப்பன பனியா பெரு முதலாளிகள் கொள்ளையடிக்க பட்டுக் கம்பளம் விரிக்கப்படுகின்றது; தொழிலாளர்களை நிரந்தரக் கொத்தடிமைகளாக மாற்றுவதற்கு ஏற்ப 44 தொழிலாளர் நலச்சட்டங்களை 4 சட்டத் தொகுப்புகளாக மாற்றி அமைத்துள்ளது மோடி அரசு. விவசாயிகளை ஓட்டாண்டியாக்கும் வேளாண் சட்டத் திருத்தங்கள் பெரும் போராட்டத்திற்குப் பிறகே ஒன்றிய அரசு திரும்பப் பெற்றுள்ளது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட எண்ணற்ற மக்கள் விரோத நடவடிக்கைகளால் மக்கள் வாழ்விழந்து அல்லல்படுகின்றனர். 

பாஜக ஆர்எஸ்எஸ் மோடி கும்பலுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போட திராணியற்ற நாம் தமிழர் சீமான், ஏதோ தமிழர்களை உய்விக்க வந்த இரட்சகர் போல, ஊர் ஊராய் கொக்கரித்துக் கொண்டிருக்கிறார். விமர்சனம் என்ற பெயரில் பொது வெளியில் செருப்பைத் தூக்கிக் காட்டுவதும், "செருப்பு தானே காட்டினேன், விட்டிருந்தால் ......" என பேசும் இவர், அரசியல்வாதியா இல்லை பொறுக்கியா? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. 

சாதி ஆணவப் படுகொலையை  'குடிப் பெருமை'  கொலை என பெருமை பேசி சாதியத்தை உயர்த்திப் பிடிக்கிறார். கீழடி அகழ்வாய்வு பார்ப்பனர்களுக்கும் கசக்கிறது; இவருக்கும் கசக்கிறது என்றால் இவர் யார்? இவரை தமிழ்ச் சங்கி என்று அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? 

வாய்க்கு வந்ததை எல்லாம் அன்றாடம் உளறிக் கொண்டிருக்கிறார். இவரது உளறலையும் கைகொட்டி ஆரவாரிக்கிறது ஒரு லூசுக் கூட்டம். தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டிய ஒரு லும்பன் கூட்டம் சீமானும் அவரது நாம் தமிழர் கட்சியும். இது குறித்து விரிவாக விளாசுகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள்! பகிருங்கள்!



நன்றி : Arakalagam

Sunday, 19 December 2021

"சாதி எனும் பெரும் தொற்று!" - நூல் திறனாய்வு!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை கிளையின் பொருளாளர் தோழர் சங்கைய்யா அவர்கள் எழுதிய "சாதி எனும் பெரும் தொற்று - தொடரும் விவாதங்கள்" நூல் திறனாய்வுக் கூட்டம் 18.12.2021, சனிக்கிழமை மாலை மதுரை மூட்டா அரங்கத்தில் நடைபெற்றது.

கிளைத் தலைவர் பேராசிரியர் அ.சீனிவாசன் அவர்கள் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தினார். கிளைச் செயலாளர் தோழர் லயனல் அந்தோணிராஜ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள் நோக்க உரை நிகழ்த்தினார்.

சாதி என்பது தொற்றாக மட்டுமல்லாமல், சமூக சமத்துவத்தைக் கொல்லும் பயங்கர நோயாக உள்ளது என்பதை நூலின் அடி ஆழம் வரை சென்று நூலில் விரவிக் கிடக்கும் ஆதாரங்களைக் கொண்டு மிக நேர்த்தியாக விளக்கினார் நூல் திறனாய்வாளர் முனைவர் ந.முருகேசன் அவர்கள்.

அதன் பிறகு, பார்வையாளர்களின் கேள்விகளுக்கு நூலாசிரியரும்  கருத்தாளர்களும் விளக்கமளித்தனர். நூலாசிரியர் சங்கையா அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது. 50க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். TN-PRPC முகநூலில் இந்நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதுவரை சங்கையா அவர்கள் எழுதிய ரூ 675 மதிப்புள்ள மூன்று நூல்கள் ரூ.450க்கு அரங்கில் விற்பனை செய்யப்பட்டன.





தகவல் 

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை கிளை
73393 26807


Saturday, 18 December 2021

பாக்ஸ்கான் ஆலைத் தொழிலாளர்கள் போராட்டத்தில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்!

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம், சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் - II ல் தைவான் நாட்டைச் சேர்ந்த வானொலி, தொலைக்காட்சி மற்றும் கைபேசி உபகரணங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் என்கிற பன்னாட்டுக் கம்பெனி செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள், ஆலை வளாகத்திற்குள்ளேயே தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். தங்குமிடம் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும் என்று ஆசை வார்த்தைகளைக் கூறிதான் இவர்களை எல்லாம் ஆலை நிர்வாகம் அழைத்து வருகிறது. கிராமப்புறங்களில் வாழ வழியற்று கிடக்கும் எண்ணற்றோர் இத்தகைய நிறுவனங்களை நோக்கி படையெடுப்பது தவிர்க்க முடியாததுதான். 

ஒரு காலத்தில் பண்ணையடிமைகள், பண்ணைகளில் தங்க வைக்கப்பட்டு, உயிர் வாழ்வதற்கும் உழைப்பதற்கும் மட்டும் உணவு வழங்கப்பட்டு, 24 மணி நேரமும் அவர்களது உழைப்புச் சுரண்டப்பட்டதோ அதுபோலத்தான், இன்றைய பன்னாட்டுக் கம்பெனிகளில் உழைப்பு சுரண்டப்படுகிறது. காற்றோட்டமில்லாத, சுகாதாரமற்ற இடங்களில் தொழிலாளர்கள் தங்க வைக்கப்படுவதும், அவர்களுக்கு தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதுவும் வாடிக்கையாகிவிட்டது. 

இப்படித்தான் பாக்ஸ்கான் நிறுவனம் 17.12.2021 அன்று தொழிலாளர்களுக்கு வழங்கிய உணவு தரமற்றதாக இருந்ததால், அது பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி உடல் நலத்தைக் கெடுத்துள்ளது. ஒரு சில தொழிலாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் என்னவானார்கள், அவர்களுடைய உடல்நிலை எப்படி இருக்கிறது, அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களா? என்பதை ஆலை நிர்வாகம் தெரிவிக்காத காரணத்தால் ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள், இரவு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராடும் பெண் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், ஆலை நிர்வாகத்திற்கு எதிராகவும் தமிழகமெங்கும் கண்டனக் குரல்கள் எழுந்தன. 

போராடும் தொழிலாளர்களுக்கு துணை நிற்பது நமது அவசிய அவசரக் கடமை என்பதை உணர்ந்து, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின், சென்னை கிளை வழக்குரைஞர்கள் போராடும் பெண் தொழிலாளர்களுடன் போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்று அவர்களுக்கு  ஆதரவுக் கரம் நீட்டி உள்ளனர்.  

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் ஏற்படுத்திய சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் அவல நிலை இதுதான். 



தகவல்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னை கிளை