Wednesday 25 November 2020

உதயமானது "நிவர்" நிவாரணக் குழு!

நண்பர்களே,

"நிவர் புயல்" - பேரிடர் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இன்று  ஆலோசனை நடத்தப்பட்டது. ஏற்கனவே கொரானா மீட்பு பணியில் ஈடுபட்ட  சென்னை மக்கள் உதவிக்குழு, வடசென்னை மக்கள் உதவிக்குழு, வியாசை தோழர்கள் உள்ளிட்ட நண்பர்கள் கலந்து கொண்டனர்.

இதில் முதற்கட்டமாக நமது தோழர்கள் வசிக்கும் பகுதிகள் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிவாரணப்பணிகளில் ஈடுபடுவது என்றும் குறிப்பாக வியாசை மற்றும் வடசென்னை பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகள் என முடிவு செய்யப்பட்டுள்ளது.  

இதை ஒருங்கிணைக்கும் வகையில் 9 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. 

PS, NN, Sarath ஒருங்கிணைக்க பொறுப்பெடுத்துக் கொண்டுள்ளனர். 

*உடனடியாக திட்டமிட்ட வேலைகள்*

1. அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வது,

2.அத்தியாவசியமான நிவாரண உதவிகளை வழங்குவது

3.  உதவி எண்கள் அறிவிப்பது

4. உதவிப்பணிகளுக்கு  நிதி திரட்டுவது

5. நாளை காலை 9 மணிக்கு கள ஆய்வு செய்வது, 

என்ற வகையில் தற்போது திட்டமிட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

நிலைமைகளையொட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தகவல்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னை


பாடத்திட்டத்தில் மீண்டும் அருந்ததி ராயின் "வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்!" சேர்ப்பா?

அருந்ததி ராய் புத்தகம் மீண்டும் பாட திட்டத்தில் சேர்ப்பா? மனோன்மனியம் பல்கலை. துணை வேந்தர் விளக்கம்

#குறிப்பு : அருந்ததிராய் புத்தகம் மீண்டும் பாடத்திட்டத்தில் இணைத்ததாக வந்த தகவல்களை ஒட்டி, நாம் ஒரு பதிவை இன்று காலையில் வெளியிட்டோம். இப்பொழுது பிபிசியில் (ஒரு மணி நேரத்திற்கு முன்பு) வந்த செய்தி துணைவேந்தர் மறுத்து சொன்ன செய்தி வெளியாகியிருக்கிறது. 

ஜனநாயக சக்திகளுடன் இணைந்து நமது போராட்டத்தையும், பிரச்சாரத்தையும் மக்களிடம் கொண்டு செல்வோம்.

****

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாட திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அருந்ததி ராயின் 'Walking With The Comrades' புத்தகத்தை மீண்டும் சேர்ப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று அந்த பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சுமணி தெரிவித்துள்ளார்.

அருந்ததி ராயின் புத்தகம் கடந்த 11-ம் தேதி பாட திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர்தான் அந்தப் புத்தகம் மாணவர்களிடையே தவறான கருத்துகளைப் பரப்புகிறது என்பதால் அதை நீக்க வேண்டும் என அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

அந்த அமைப்பின் அழுத்தம் காரணமாகவே புத்தகம் பாட திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டினர். ஆனால் அந்த கருத்துக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி மறுப்பு தெரிவித்திருந்தார். மாணவர்கள் நலன் கருதியே புத்தகம் நீக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த வாரம் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய காவல்துறையினர், சில மாணவர்களை மட்டும் துணைவேந்தரைச் சந்திக்க ஏற்பாடு செய்தனர்.

இதையடுத்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் தலைமையில் சில மாணவர்கள் மட்டும் துணைவேந்தரைச் சந்தித்தனர். அப்போது நீக்கப்பட்ட புத்தகத்தை மீண்டும் சேர்க்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அது மட்டுமின்றி கடந்த வாரத்தில் திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் துணைவேந்தரைச் சந்தித்து மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் 'Walking With The Comrades' புத்தகம் மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு விட்டதாக புதன்கிழமை தகவல்கள் வெளிவந்தன. சில தொலைக்காட்சிகளிலும் அந்த செய்தி ஒளிபரப்பாயின.

அந்த செய்தியைப் பார்த்த அருந்ததி ராய் நன்றி தெரிவிப்பதாகக் கூறும் அறிக்கையும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.

இந்த அறிக்கை தொடர்பாகத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யாவிடம் கேட்ட போது 'கடந்த 23-ம் தேதி நடந்த பாடத்திட்டத் தேர்வுக் குழுக் கூட்டத்தின் போது அருந்ததி ராயின் புத்தகத்தை மீண்டும் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எங்களுக்கு கிடைத்த உறுதியான தகவல்களுக்குப் பின்னரே எங்கள் அமைப்பு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது' என்று கூறினார்.

பல்கலைக்கழகத்தின் முடிவு அருந்ததிராயின் கவனத்துக்கும் சென்றிருக்கிறது. கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்ட பின்னரும் அது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் சார்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மேலும் எங்கள் அமைப்பின் அறிக்கைக்கோ, அருந்ததி ராயின் அறிக்கைக்கோ துணைவேந்தர் இன்னும் மறுப்பு தெரிவிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே பாடத்திட்டத் தேர்வுக் குழுவின் முடிவைப் பற்றி துணைவேந்தர் வெளிப்படையாக அறிவிக்க முன்வர வேண்டும்' என்று ஆதவன் தீட்சண்யா தெரிவித்தார்.

இது தொடர்பாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பிச்சுமணியிடம் கேட்ட போது இது தொடர்பாக தற்போது வெளியாகும் தகவல்கள் தவறானவை என்று கூறினார். பாட திட்டத் தேர்வுக் குழுக் கூட்டத்தின் போது இது பற்றி விவாதிக்கப்பட்டதாகக் கூறிய அவர், அருந்ததி ராயின் புத்தகத்தை மீண்டும் சேர்ப்பது தொடர்பான கோரிக்கை இன்னும் பரிசீலனை அளவிலேயே உள்ளது என்றும் அதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

- BBC NEWS

https://www.bbc.com/tamil/india-55074700

முன்பு வெளியான தகவல்

பாடத்திட்டத்தில் மீண்டும் ‘வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்’: அருந்ததிராய் நன்றி!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் மீண்டும் அருந்ததி ராயின் நூல் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து எழுத்தாளர் அருந்ததி ராய் வெளியிட்டுள்ள அறிக்கை: 

“திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ‘ வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்’ என்ற எனது நூலை மீண்டும்  அதன் பாடத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டிருப்பதாக அறிந்தேன். 

தனிநபர்கள், அமைப்புகள், அரசியல்வாதிகள் மற்றும் செய்தி ஊடகங்கள் முன்னெடுத்த பொது விவாதம் இல்லாமல் இது ஒருபோதும் நடந்திருக்க முடியாது. அறிவுபூர்வமாக முதிர்ச்சியடைந்த சமூகங்கள், மக்கள், நாடுகள் இப்படித்தான் துடிப்பாக மற்றும் உயிரோட்டமாக இருக்க முயற்சிக்கின்றன.

புத்தகத்திற்காகப் பேசிய அனைவருக்கும் மற்றும் எம்.எஸ் பல்கலைக்கழகத்திற்கும், அழுத்தத்துக்கும், மிரட்டலுக்கும் பணியாமல் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுத்த பல்கலைக்கழகத்துக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். "

-அருந்ததி ராய்

நன்றி: Gunaa Gunasekaran


Monday 16 November 2020

ஸ்டெர்லைட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில்  விசாரணை:

ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலைத் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

அதை  தொடர்ந்து ஸ்டெர்லைட்  நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு இன்று 16.11.2020 நீதிபதிகள் நவீன் சின்ஹா  மற்றும் கே.எம். ஜோசஃப் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பாக  மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி  மற்றும்  முகுல் ரோதங்கி ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். 

அதில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஸ்டெர்லைட் ஆலை மீறியதாக கூறப்பட்ட பல விதிமீறல்கள் சரிசெய்யப்பட்டுவிட்டன. இன்னும் மூன்று மாத காலம் அவகாசம் கொடுத்து ஆலையைத் திறக்க அனுமதி கொடுத்தால் அனைத்து நிபந்தனைகளும் சரி செய்யப்படும் என்றும்,  பிரச்சனையை சுமூகமாக முடிக்க வேண்டும் எனவும்,  இந்திய காப்பர் உற்பத்தியை கணக்கில் எடுத்துகொண்டு பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும்;அதற்கேற்ற பொருத்தமான வடிவில் குறைந்த பக்க அளவில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக வாதிட்டார். மேலும் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தங்கி, விசாரணை ஆணையம் அமைத்துதான் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று வாதிட்டார்.

அதற்கு எதிராக அரசு தரப்பு சார்பாக மூத்த  வழக்கறிஞர்கள் சி.எஸ் . வைத்தியநாதன், கே.வி.விஸ்வநாதன் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக மூத்த வழக்கறிஞர் காலின் கொன்சால்வேஸ், வழக்கறிஞர் சபரீஷ் ஆகியோர் ஆஜராகி ஸ்டெர்லைட்  நிறுவனத்தின் வாதங்களை ஏற்றுக்கொள்ள முடியாது, சுற்றுப்புறச்சூழலை மாசு படுத்தியதால் தமிழக அரசு நிரந்தரமாக அந்த ஆலையை மூடியது, பின்னர் விரிவான விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம்  ஆலையை நிரந்தமாக மூடியதை ஏற்று  இறுதித் தீர்ப்பு வழங்கியது என்று வாதிட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பே இல்லை என்று அரசு தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இந்த நிலையில் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி  பிரமாண பத்திரம் தாக்கல் செய்யட்டும், இருதரப்பு வாதத்தையும் கேட்ட பிறகே இடைக்கால தீர்ப்பு தேவையா என்பதை முடிவு செய்வோம் என்று தெரிவித்து, டிசம்பர் மாதம் முதல்வாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

- சு . ஜிம்ராஜ்  மில்ட்டன்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

Wednesday 11 November 2020

குரங்கு சேனா ஸ்ரீதர் படுத்தே விட்டானடா|

தொல்.திருமாவளவனுக்கு எதிராக உதார்விட்ட குரங்கு சேனாவைச் சேர்ந்த ஸ்ரீதர் உள்ளிட்ட சங்கிகளைத் தோலுரிக்கிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள்!பகிருங்கள்!

நன்றி: அறக்கலகம்

Tuesday 10 November 2020

திருமாவளவன் மீதான வழக்குத் தள்ளுபடி - பாஜகவுக்குப் பின்னடைவா?

 திருமாவளவன் மீதான வழக்கு தள்ளுபடி - பாஜகவுக்கு பின்னடைவா?

வழக்குப் போட்டவர் மீது வழக்கு போடணும்

வழக்கறிஞர் வாஞ்சிநாதன்,
ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
தமிழ்நாடு

நன்றி: லிபர்ட்டி



Wednesday 4 November 2020

கேரள மாவோயிஸ்ட் வேல்முருகன் படுகொலை! மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் கடும் கண்டனம்!

 04.11.2020

பத்திரிகைச் செய்தி

கேரளாவில் மாவோயிஸ்ட் தோழர் வேல்முருகன் போலி மோதலில் சுட்டுப் படுகொலை

மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் பினராயி விஜயன் அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும்!

தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த 33 வயது மாவோயிஸ்ட் இளைஞர் வேல்முருகன் நவம்பர் 3 செவ்வாய்க்கிழமை காலை கேரள அதிரடிப்படை போலீசாரால் போலி மோதலில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை வயநாடு காவல் எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் அதிரடிப்படை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்களாம். அப்போது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்களாம். தற்காப்புக்காகப் போலீசார் திருப்பிச் சுட்டதில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சார்ந்த வேல்முருகன் இறந்துவிட்டாராம். போலி மோதல் படுகொலைகளை நியாயப்படுத்தும் வழக்கமானப் புனை கதையைத்தான் பினராய் விஜயன் அரசும் சொல்லிக் கொண்டிருக்கிறது..

கேரளாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், இது சட்டவிரோதப் போலி மோதல் படுகொலை என்றும், இது குறித்து நீதி விசாரணை தேவை என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். மோதல் நடந்த இடத்திற்குச் செல்ல ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும் அனுமதி மறுத்து வருவதோடு குற்றத்தை மறைக்கவும் ஆதாரங்களை அழிக்கவும் பினராய் விஜயன் அரசு முயற்சி செய்வதாக மனித உரிமை சபை எனும் அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் நிர்மல் சாரதி அம்பலப்படுத்தி உள்ளார்.  பொதுவுடைமைக் கட்சி என்ற பெயரில் ஆட்சி நடத்திக் கொண்டு இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை பினராயி விஜயன் அரசு மேற்கொள்வது வெட்கித் தலைகுனிய வேண்டிய செயலாகும்.

வேல்முருகன்

கேரளாவில் மாவோயிஸ்ட் அமைப்பினர் மக்களைத் துன்புறுத்தும் வகையில் எந்தவித சட்ட விரோத நடவடிக்கைகளிலும் இதுவரை ஈடுபட்டதில்லை என்று  சொல்லப்படுகிறது. அவ்வாறு இருக்க பினராய் விஜயன் ஆட்சியமைத்த கடந்த நான்காண்டுகளில் நடத்தப்படும் நான்காவது போலி மோதல் படுகொலை இதுவாகும். மற்ற முதலாளித்துவ ஆளும் வர்க்கக் கட்சிகளைவிட மிகக் கீழ்த்தரமான முறையில் மக்களுக்காகப் பாடுபடும் போராளிகளைப் படுகொலை செய்து வரும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான பினராய் விஜயன் அரசு தொடர்ந்து மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து வருகிறது. எனவே பினராயி விஜயன் அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும். வேல்முருகன் படுகொலையைக் கண்டிக்கின்ற அதேவேளையில் இந்தப் படுகொலை குறித்து வெளிப்படையான, முறையான நீதி விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலைக்குற்றம் பதிவு செய்து தண்டிக்கப்பட வேண்டும் என மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் வலியுறுத்துகிறது.

வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்