Wednesday 22 December 2021

பாஜகவில் நீதிபதிகள் அணி!

14.12.2021 அன்று திருச்சியில் நடைபெற்ற மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ஒன்பதாவது மாநில மாநாட்டில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள் ஆற்றிய உரை. 

00000

அனைவருக்கும் வணக்கம்,

நாடு எத்தகைய நெருக்கடியான, அபாயகரமான சூழலில் இருக்கிறது என்பதை மக்கள் உணராமல் இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன்.

ஆர்எஸ்எஸ்-பாஜகவின் ஊதுகுழலாகச் செயல்படும் யு-டியூபர் மாரிதாஸ் என்பவர் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சூழலில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவரது பிணை மனு 13.-12-2021 திங்கள் காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. எத்தனையோ வழக்குகள் வரிசையில் காத்துக் கிடக்கும் போது, இந்த வழக்கை முதல் வழக்காக எடுத்து நீதிமன்றம் விசாரிக்கிறது. முதல் தகவல் அறிக்கையின் நகல்கூட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. தமிழக அரசு இவ்வழக்கை விசாரிக்கக் கால அவகாசம் கோருகிறது. ஆனால் நீதிபதியோ, அன்றே விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறார். மாரிதாஸ் மீது புகார் கொடுத்த புகார்தாரர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர் வெளியூரில் காரில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அவரோடு ஆன்லைனிலேயே வழக்கு விசாரிக்கப்படுகிறது. தான் காரில் பயணம் செய்வதால் எதையும் சரியாக உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை என்று அவர் கூறுகிறார். அவரும் அவகாசம் கோருகிறார். ஆனால் இதை எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமலேயே மாரிதாஸ் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. தள்ளுபடி செய்யப்பட்டது மிகச் சாதாரண வழக்கு அல்ல, தேசத்துரோக வழக்கு, 124 A, IPC. வழக்கு போடப்பட்ட நான்காவது நாளிலேயே தள்ளுபடி செய்யப்படுகிறது.

ஆனால் தோழர் காளியப்பன், தோழர் கோவன், தோழர் வாஞ்சிநாதன், தோழர் ராஜு மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்குகளில் அவர்கள் சில மாதங்கள் சிறையில் இருந்து போராடிய பிறகுதான் பிணையில் வெளி வரமுடிந்தது. ஆண்டுகள் கடந்து போனாலும் இன்றும் அவர்கள் அந்த வழக்குகளுக்காக நீதிமன்ற வாசற்படிகளில் ஏறிக் கொண்டிருக்கிறார்கள்.
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட சுதா பரத்வாஜ் வரவரராவ் உள்ளிட்ட சமூகச் செயல்பாட்டாளர்கள் ஆண்டுக் கணக்கில் சிறையில் வாடுகிறார்கள். இவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளும் தேசத்துரோக வழக்குகள்தான். இவர்களால் இன்றுவரை வழக்கிலிருந்து விடுபட முடியவில்லை. ஆனால் மாரிதாஸ் மீதான வழக்கு நான்கு நாட்களிலேயே தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆர்எஸ்எஸ் - பாஜகவினர், நீதிபதிகள் அணி ஒன்றை வைத்துள்ளனர் என்பதைத்தானே இது உணர்த்துகிறது. 

இராணுவம், போலீசு, RAW, IB, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உள்ளிட்ட அரசின் அத்தனை துறைகளிலும் அவர்கள் தங்களது அணியை ஏற்கனவே உருவாக்கி விட்டனர். இதுதான் அபாயம். இந்த அபாயத்தைத்தான் மக்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

சுதா பரத்வாஜ் அவர்களுக்கு தற்போதுதான் நிபந்தனையில் பிணை கிடைத்துள்ளது. ஸ்டேன் சாமி மிகவும் உடல் நலிவுற்ற நிலையில் பிணை கோரி முறையிட்ட போதும் ஈவிரக்கமின்றி பிணை மறுக்கப்பட்டதால் அவர் சிறையிலேயே மாண்டு போனார். நீரிழிவு நோயினால் சிறுநீர் கழிக்கக் கூட சிரமப்படும் வரவர ராவ் மீதான பிணை மனு நிராகரிக்கப் படுகிறது. ஆர்எஸ்எஸ் சங் பரிவாரங்களின் ஊதுகுழலான அர்னாப் கோஸ்வாமி மீதான வழக்கு மறுபரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அவர் உடனடியாக விடுவிக்கப்படுகிறார். 

இவையெல்லாம் எதை உணர்த்துகின்றன? நடப்பது சங்க்பரிவார சனாதனிகளின் ஆட்சிதான் என்பதை உணர்த்த வில்லையா? "சனாதனம்தான் நாட்டின் பண்பாடு" என வாரணாசியில் மோடி பேசியிருப்பதைப் பொருத்திப் பாருங்கள், உண்மை புரியும்.

உரை மேலும் தொடர்கிறது. பாருங்கள்! பகிருங்கள்!



Tuesday 21 December 2021

சீமான் ஒரு பொறுக்கியா? நாம் தமிழர் கூட்டம் ஒரு லூசுக் கூட்டமா?

மோடி தலைமையிலான பாஜக ஆர்எஸ்எஸ் கும்பல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பின்பு, பொதுத் துறைகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகின்றன; நாட்டின் கனிம வளங்கள் அதானி அம்பானி போன்ற பார்ப்பன பனியா பெரு முதலாளிகள் கொள்ளையடிக்க பட்டுக் கம்பளம் விரிக்கப்படுகின்றது; தொழிலாளர்களை நிரந்தரக் கொத்தடிமைகளாக மாற்றுவதற்கு ஏற்ப 44 தொழிலாளர் நலச்சட்டங்களை 4 சட்டத் தொகுப்புகளாக மாற்றி அமைத்துள்ளது மோடி அரசு. விவசாயிகளை ஓட்டாண்டியாக்கும் வேளாண் சட்டத் திருத்தங்கள் பெரும் போராட்டத்திற்குப் பிறகே ஒன்றிய அரசு திரும்பப் பெற்றுள்ளது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட எண்ணற்ற மக்கள் விரோத நடவடிக்கைகளால் மக்கள் வாழ்விழந்து அல்லல்படுகின்றனர். 

பாஜக ஆர்எஸ்எஸ் மோடி கும்பலுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போட திராணியற்ற நாம் தமிழர் சீமான், ஏதோ தமிழர்களை உய்விக்க வந்த இரட்சகர் போல, ஊர் ஊராய் கொக்கரித்துக் கொண்டிருக்கிறார். விமர்சனம் என்ற பெயரில் பொது வெளியில் செருப்பைத் தூக்கிக் காட்டுவதும், "செருப்பு தானே காட்டினேன், விட்டிருந்தால் ......" என பேசும் இவர், அரசியல்வாதியா இல்லை பொறுக்கியா? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. 

சாதி ஆணவப் படுகொலையை  'குடிப் பெருமை'  கொலை என பெருமை பேசி சாதியத்தை உயர்த்திப் பிடிக்கிறார். கீழடி அகழ்வாய்வு பார்ப்பனர்களுக்கும் கசக்கிறது; இவருக்கும் கசக்கிறது என்றால் இவர் யார்? இவரை தமிழ்ச் சங்கி என்று அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? 

வாய்க்கு வந்ததை எல்லாம் அன்றாடம் உளறிக் கொண்டிருக்கிறார். இவரது உளறலையும் கைகொட்டி ஆரவாரிக்கிறது ஒரு லூசுக் கூட்டம். தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டிய ஒரு லும்பன் கூட்டம் சீமானும் அவரது நாம் தமிழர் கட்சியும். இது குறித்து விரிவாக விளாசுகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள்! பகிருங்கள்!



நன்றி : Arakalagam

Sunday 19 December 2021

"சாதி எனும் பெரும் தொற்று!" - நூல் திறனாய்வு!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை கிளையின் பொருளாளர் தோழர் சங்கைய்யா அவர்கள் எழுதிய "சாதி எனும் பெரும் தொற்று - தொடரும் விவாதங்கள்" நூல் திறனாய்வுக் கூட்டம் 18.12.2021, சனிக்கிழமை மாலை மதுரை மூட்டா அரங்கத்தில் நடைபெற்றது.

கிளைத் தலைவர் பேராசிரியர் அ.சீனிவாசன் அவர்கள் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தினார். கிளைச் செயலாளர் தோழர் லயனல் அந்தோணிராஜ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள் நோக்க உரை நிகழ்த்தினார்.

சாதி என்பது தொற்றாக மட்டுமல்லாமல், சமூக சமத்துவத்தைக் கொல்லும் பயங்கர நோயாக உள்ளது என்பதை நூலின் அடி ஆழம் வரை சென்று நூலில் விரவிக் கிடக்கும் ஆதாரங்களைக் கொண்டு மிக நேர்த்தியாக விளக்கினார் நூல் திறனாய்வாளர் முனைவர் ந.முருகேசன் அவர்கள்.

அதன் பிறகு, பார்வையாளர்களின் கேள்விகளுக்கு நூலாசிரியரும்  கருத்தாளர்களும் விளக்கமளித்தனர். நூலாசிரியர் சங்கையா அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது. 50க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். TN-PRPC முகநூலில் இந்நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதுவரை சங்கையா அவர்கள் எழுதிய ரூ 675 மதிப்புள்ள மூன்று நூல்கள் ரூ.450க்கு அரங்கில் விற்பனை செய்யப்பட்டன.





தகவல் 

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை கிளை
73393 26807


Saturday 18 December 2021

பாக்ஸ்கான் ஆலைத் தொழிலாளர்கள் போராட்டத்தில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்!

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம், சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் - II ல் தைவான் நாட்டைச் சேர்ந்த வானொலி, தொலைக்காட்சி மற்றும் கைபேசி உபகரணங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் என்கிற பன்னாட்டுக் கம்பெனி செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள், ஆலை வளாகத்திற்குள்ளேயே தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். தங்குமிடம் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும் என்று ஆசை வார்த்தைகளைக் கூறிதான் இவர்களை எல்லாம் ஆலை நிர்வாகம் அழைத்து வருகிறது. கிராமப்புறங்களில் வாழ வழியற்று கிடக்கும் எண்ணற்றோர் இத்தகைய நிறுவனங்களை நோக்கி படையெடுப்பது தவிர்க்க முடியாததுதான். 

ஒரு காலத்தில் பண்ணையடிமைகள், பண்ணைகளில் தங்க வைக்கப்பட்டு, உயிர் வாழ்வதற்கும் உழைப்பதற்கும் மட்டும் உணவு வழங்கப்பட்டு, 24 மணி நேரமும் அவர்களது உழைப்புச் சுரண்டப்பட்டதோ அதுபோலத்தான், இன்றைய பன்னாட்டுக் கம்பெனிகளில் உழைப்பு சுரண்டப்படுகிறது. காற்றோட்டமில்லாத, சுகாதாரமற்ற இடங்களில் தொழிலாளர்கள் தங்க வைக்கப்படுவதும், அவர்களுக்கு தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதுவும் வாடிக்கையாகிவிட்டது. 

இப்படித்தான் பாக்ஸ்கான் நிறுவனம் 17.12.2021 அன்று தொழிலாளர்களுக்கு வழங்கிய உணவு தரமற்றதாக இருந்ததால், அது பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி உடல் நலத்தைக் கெடுத்துள்ளது. ஒரு சில தொழிலாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் என்னவானார்கள், அவர்களுடைய உடல்நிலை எப்படி இருக்கிறது, அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களா? என்பதை ஆலை நிர்வாகம் தெரிவிக்காத காரணத்தால் ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள், இரவு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராடும் பெண் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், ஆலை நிர்வாகத்திற்கு எதிராகவும் தமிழகமெங்கும் கண்டனக் குரல்கள் எழுந்தன. 

போராடும் தொழிலாளர்களுக்கு துணை நிற்பது நமது அவசிய அவசரக் கடமை என்பதை உணர்ந்து, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின், சென்னை கிளை வழக்குரைஞர்கள் போராடும் பெண் தொழிலாளர்களுடன் போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்று அவர்களுக்கு  ஆதரவுக் கரம் நீட்டி உள்ளனர்.  

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் ஏற்படுத்திய சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் அவல நிலை இதுதான். 



தகவல்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னை கிளை


Friday 17 December 2021

மாரிதாஸ் பேசுவது கருத்துரிமையா அல்லது கலவர உரிமையா?

சங்பரிவார அரசியலின், ஆர்எஸ்எஸின் நேரடிப் பிரதிநிதிகளான மாரிதாஸ், பாண்டே போன்றவர்கள் ஆபத்தானவர்களா அல்லது தமிழ் தேசியப் போர்வையில் சங்பரிவார அரசியலுக்கும், ஆர்எஸ்எசுக்கும் பல்லக்குத் தூக்கும் சீமான் போன்றவர்கள் ஆபத்தானவர்களா?

மாரிதாஸ் போன்ற பாசிஸ்டுகள் பேசுவது கருத்துரிமையா அல்லது கலவர உரிமையா?

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து: முப்படைத் தளபதி பிவின் ராவத் மரணம்: யார் குற்றவாளி?

மேற்கண்ட விசயங்கள் குறித்து தெளிவு படுத்துகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள்! பகிருங்கள்!


நன்றி : Arakalgam tv