Saturday 18 December 2021

பாக்ஸ்கான் ஆலைத் தொழிலாளர்கள் போராட்டத்தில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்!

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம், சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் - II ல் தைவான் நாட்டைச் சேர்ந்த வானொலி, தொலைக்காட்சி மற்றும் கைபேசி உபகரணங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் என்கிற பன்னாட்டுக் கம்பெனி செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள், ஆலை வளாகத்திற்குள்ளேயே தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். தங்குமிடம் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும் என்று ஆசை வார்த்தைகளைக் கூறிதான் இவர்களை எல்லாம் ஆலை நிர்வாகம் அழைத்து வருகிறது. கிராமப்புறங்களில் வாழ வழியற்று கிடக்கும் எண்ணற்றோர் இத்தகைய நிறுவனங்களை நோக்கி படையெடுப்பது தவிர்க்க முடியாததுதான். 

ஒரு காலத்தில் பண்ணையடிமைகள், பண்ணைகளில் தங்க வைக்கப்பட்டு, உயிர் வாழ்வதற்கும் உழைப்பதற்கும் மட்டும் உணவு வழங்கப்பட்டு, 24 மணி நேரமும் அவர்களது உழைப்புச் சுரண்டப்பட்டதோ அதுபோலத்தான், இன்றைய பன்னாட்டுக் கம்பெனிகளில் உழைப்பு சுரண்டப்படுகிறது. காற்றோட்டமில்லாத, சுகாதாரமற்ற இடங்களில் தொழிலாளர்கள் தங்க வைக்கப்படுவதும், அவர்களுக்கு தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதுவும் வாடிக்கையாகிவிட்டது. 

இப்படித்தான் பாக்ஸ்கான் நிறுவனம் 17.12.2021 அன்று தொழிலாளர்களுக்கு வழங்கிய உணவு தரமற்றதாக இருந்ததால், அது பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி உடல் நலத்தைக் கெடுத்துள்ளது. ஒரு சில தொழிலாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் என்னவானார்கள், அவர்களுடைய உடல்நிலை எப்படி இருக்கிறது, அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களா? என்பதை ஆலை நிர்வாகம் தெரிவிக்காத காரணத்தால் ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள், இரவு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராடும் பெண் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், ஆலை நிர்வாகத்திற்கு எதிராகவும் தமிழகமெங்கும் கண்டனக் குரல்கள் எழுந்தன. 

போராடும் தொழிலாளர்களுக்கு துணை நிற்பது நமது அவசிய அவசரக் கடமை என்பதை உணர்ந்து, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின், சென்னை கிளை வழக்குரைஞர்கள் போராடும் பெண் தொழிலாளர்களுடன் போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்று அவர்களுக்கு  ஆதரவுக் கரம் நீட்டி உள்ளனர்.  

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் ஏற்படுத்திய சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் அவல நிலை இதுதான். 



தகவல்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னை கிளை


No comments:

Post a Comment