பத்திரிக்கைச் செய்தி:
'நீட்' தேர்வை எதிர்த்து சென்னையில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய மக்கள் பாதை அமைப்பின் மீதான காவல்துறையின் தாக்குதலைக் கண்டிக்கிறோம்!!
'நீட்' தேர்வை எதிர்த்து கடந்த 6 நாட்களாக சென்னையில் உள்ள தங்கள் தலைமை அலுவலகத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்திவந்த மக்கள் பாதை அமைப்பைச் சேர்ந்த 6 பேர் இன்று காலை 6 மணிக்குக் கைது செய்யப்பட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மக்கள் பாதை தலைமை அலுவலகத்தில் இருந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் பாதை அலுவலகம் காவல்துறையால் சூறையாடப்பட்டது, ஏராளமான கோப்புகள் திருடப்பட்டுள்ளதாக அந்த அமைப்பைச் சேர்ந்த வெற்றிசெல்வி தெரிவித்துள்ளார்.
அலுவலகம் காவல்துறையால் சட்டவிரோதமாக மூடிவைக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் 'நீட்' தேர்வை எதிப்பதாக பேசிக்கொண்டே, 'நீட்' தேர்வை எதிர்த்து அமைதி வழியில் போராடுபவர்களைக் காவல்துறையைக் கொண்டு தாக்கும் தமிழக அரசின் இரட்டை வேடத்தை, காவல்துறை தர்பாரைக் கண்டிக்கிறோம்.
இது தொடர்பாக மக்கள் பாதை அமைப்பைச் சார்ந்த திரு.நாகல்சாமி அவர்களைத் தொடர்பு கொண்டு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பாக நடந்ததைக் கேட்டுத் தெரிந்து கொண்டோம். அவர் சென்னை காவல்துறை ஆணையர் அவர்களை தொடர்புகொண்டு பேசியதாகவும், போராட்டத்தை கண் கைவிட்டால் அலுவலகத்திற்குள் அனுமதிப்பதாக காவல் ஆணையர் கூறியதாகத் தெரிவித்தார். காவல் ஆணையர் இப்படிப் பேசுவதே மிரட்டல், சட்டவிரோதம். அமைதிவழிப் போராட்டத்தை ஒடுக்கும் குறுக்குவழி. அரசியல்அமைப்புச் சட்டம் கொடுத்திருக்கும் அமைதி வழியில் போராடும் உரிமைக்கு எதிரானது. உச்சநீதிமன்ற, உயர்நீதி மன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது.
'நீட்' தேர்வை எதிர்ப்பதாக நாடகமாடும் எடப்பாடி அரசாங்கம் காவல்துறை மூலம் நீட்டுக்கு எதிராகப் பேசுவதை, போராடுவதைத் தடி கொண்டு ஒடுக்கி பா.ஜ.கா - மோடி அரசுக்குச் சேவகம் செய்வதை ம.உ.பா.மையம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் - சென்னை
No comments:
Post a Comment