Thursday 20 May 2021

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்று!

பத்திரிக்கைச் செய்தி:

தமிழக முதல்வருக்குக் கோரிக்கை:

1. ஸ்டெர்லைட் நிர்வாகத்தை அழைத்துப்பேசி  தூத்துக்குடி ஆலையை  அகற்றிக் கொள்ள வலியுறுத்த வேண்டும்  (இல்லையேல்) 

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட  உச்சநீதிமன்ற நீதிபதி ரோகிண்டன் நாரிமன் அமர்வில் வழக்கு விசாரணையை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும்! 

2. தூத்துக்குடி போராளிகளை சுற்றுச்சூழல் தியாகிகளாக அறிவிக்க வேண்டும்!

3. சுட்டுக் கொன்ற காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய காவல்துறை உயரதிகாரிகளுக்கு  முக்கிய பொறுப்புகள் வழங்கக் கூடாது!

4. தூத்துக்குடி மற்றும் தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்போது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்!

5. நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு முன்பே தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் "ஸ்டெர்லைட் ஆலையை  ஒருபோதும் திறக்க மாட்டோம்" என அறிவித்திருந்தார். நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களிலும் திமுக ஸ்டெர்லைட் எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. "ஸ்டெர்லைட்டை திறக்கவிட மாட்டோம்"  என்ற முதல்வரின் கருத்துதான், ஒட்டுமொத்த தமிழக மக்கள், உலகத் தமிழர்களின் கருத்து.

நச்சாலை ஸ்டெர்லைட்  இனி தமிழகத்திற்கு வேண்டாம் என்பதில்  தூத்துக்குடி மக்கள், தமிழக மக்கள், பாஜக தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கத்தினர் உறுதியாக உள்ளனர். ஆனால் ஸ்டெர்லைட் நிர்வாகம்,  வேதாளம் மீண்டும்  முருங்கை மரம் ஏறிய கதையாக, பசுமைத் தீர்ப்பாயம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்ற வழக்குகள், அடுத்தடுத்து இடைக்கால மனுக்கள் என்று,  எப்படியாவது மீண்டும் தூத்துக்குடியில் ஆலையை இயக்க வேண்டும் எனக்கருதி பல கோடிகள் செலவு செய்து  வருகிறது. தற்போது உயிர் காக்கும் ஆக்ஸிஜன்  1050 மெட்ரிக் டன் தினமும் வழங்குகிறோம் என்று சொல்லி 10, 15 மெட்ரிக் டன்னுக்கே தடுமாறி வருகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் புற்று நோயில் மடிந்தும், பல முறை விசவாயு கசிந்தும், 2018 மே-22 அன்று 15 பேரின் உயிரைக் குடித்த பின்பும் மீண்டும் ஆலையை இயக்க வேதாந்தா நிறுவனம் முயற்சிப்பது 7 கோடித் தமிழர்கள், தமிழக அரசு, அனைத்து அரசியல் கட்சிகளை  வெளிப்படையாக அவமதிப்பதாகும். தமிழக மக்களின் சுயமரியாதையை சீண்டுவதாகும். மகாராஷ்டிரா மாநிலம் இரத்தினகிரியில் அமைந்த வேதாந்தா தாமிர உருக்காலையை பாஜக, சிவசேனா கட்சியினரும், மக்களும் உடைத்தெறிந்தனர். அவ்வாலை மூடப்பட்டது. ஆனால் தமிழக மக்கள் சட்டம், ஜனநாயகத்தில்  நம்பிக்கை வைத்து 24 ஆண்டுகளாக நீதிமன்றப் படியேறி வருகின்றனர். இதைப் புரிந்து கொண்டு ஸ்டெர்லைட் நிர்வாகம் தானே ஆலையை அகற்ற வேண்டும். தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்தபடி  இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முதல்வரே பேச்சு வார்த்தை நடத்தி ஸ்டெர்லைட் ஆலையை அகற்றி விட்டால் தூத்துக்குடி மக்களும், தமிழக மக்களும் என்றென்றும் அதற்கு நன்றியுடன் இருப்பர். திராவிட இயக்க வரலாறும் இதைப் பதிவு செய்யும். ஸ்டெர்லைட் நிர்வாகம் இதற்கு உடன்படாவிட்டால், விதிகளை மிக நீண்ட காலம் மீறி சுற்றுச் சூழலை நாசம் செய்த குற்றத்திற்காக உரிய கிரிமினல் வழக்குகள் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் தொடரப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பொது அமைதி கெட்டு சுமார் 300-க்கும் மேலான வழக்குகள், பல கோடி ரூபாய் சொத்துக்கள் நாசம், ஏராளமான மனித உயிர்கள் பலியாகி உள்ளதை கணக்கில் கொண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 133-ன் கீழ் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து ஆலையை நிரந்தரமாக அகற்ற உத்தரவிடலாம்.

தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகள் மட்டுமே வேதாந்தா நிறுவனத்தை பின்வாங்கச் செய்யும். உச்ச நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றாலும் தூத்துக்குடியில் ஆலையை இயக்க முடியாது என்று கருதச் செய்யும். எனவே  இரண்டாம் ஜாலியன் வாலாபாக் என்று கருதப்படும் தூத்துக்குடி படுகொலையின் மூன்றாமாண்டு நினைவு நாளான மே-22 அன்று தமிழக முதல்வர் ஸ்டெர்லைட்டை தூத்துக்குடியிலிருந்து நிரந்தரமாக அகற்றுவதற்கான அறிவிப்புகளைச்  செய்ய வேண்டும் எனக் கோருகிறோம்.

-----------------------------------------

சே. வாஞ்சி நாதன், வழக்குரைஞர்
சட்ட ஆலோசகர், 
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.

மாநில  ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

384, கிழக்கு 8-வது தெரு, கே.கே.நகர், மதுரை-20.  

தொடர்பு கொள்ள: 98653 48163

No comments:

Post a Comment