Monday 24 May 2021

'சங்கத்தலைவனுக்கும்' பங்கிருக்கு!

சங்கத்தலைவனுக்கும் பங்கிருக்கு!

மே-22 தியாகிகள் நினைவு நாளில் PRPC-யின் zoom மீட்டிங் & பூவையா என்ற JP
தலைப்பு குழப்புதா?
அப்படித்தான் குழப்பும்.
அதுக்கு ஒன்னுஞ் செய்ய முடியாது...
"என்னண்ணே நினைவஞ்சலி பிளக்ஸ் போர்டு வந்துருச்சா..."
மே-21, இரவு10.30 மணிக்கு ஸ்டெர்லைட்டுக்கு பக்கத்து தெற்கு வீரபாண்டியபுரம் பூவையா என்ற ஜெயப்பிரகாஷ் (JP) அவர்களுக்கு போன் செய்கிறேன்.
"வந்துருச்சி சார், நான் பாக்கல, அம்மா சொன்னாங்க" என்றார்.
"அப்படியா வந்ததே தெரியாம ஏதும் முக்கியமான வேலையில இருந்தீங்களா?"
"இல்ல சார், விஜய் டிவியில சமுத்திரகனியும், கருணாஸும் நடிச்ச சங்கத்தலைவன் படம் போட்டாங்க,10 மணி வரை இந்தப்படம் பார்க்கும் போது வேற எந்த நினைப்பும் வரல சார்...
இப்ப என்னன்னா... பிளக்ஸ எடுத்து நைட்டே கட்டணும் போல இருக்கு, ஏற்பாடு பண்ண போறோம், கம்பெடுத்து போடணும் சார்" என்றார்.
"சரி, நைட் எதுக்கு?, மத்தவங்க தூங்கி இருப்பாங்க. காலையில சேர்ந்து கட்டுங்கண்ணே"
"சரிங்க சார் அப்படியே பண்ணிருவோம்" என்றார். செல்போனை வைத்துவிட்டேன்.
கொஞ்ச நேரத்தில் "தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு ஒரு நினைவேந்தல் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு வைக்கிறோம், போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசுனா நல்லா இருக்கும்" என்று PRPC சென்னை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மில்டன் என்னிடம் பேசினார்.
அதற்குப் பிறகு, நான் போராட்டக்களத்தில் இருந்த பல முன்னணியாளர்களுடன் தொடர்பு கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு பேசினேன்.
"அதைப்போல பூவையா அவர்களிடமும் கேட்போம். அவர் பேசத் தயங்குவார். ஒருவேளை அவர் தயங்கினால், அவரது மனைவியையோ அல்லது அவரது அம்மா ஜெயலட்சுமி அவர்களையோ பேசச் சொல்லலாம்" என்று நினைத்து தான் செல்போனில் கூப்பிட்டேன். "பூவையாண்ணே இதுமாதிரி நம்ம மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் நடத்துற நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் நாளை காலையில 11 மணிக்கு, உங்க போராட்ட அனுபவம் கவர்மெண்ட்டுக்கு நாம வைக்கக்கூடிய கோரிக்கைகள், இதெல்லாம் வைச்சு, நீங்க ஒரு அஞ்சு நிமிஷம் பேசணும்".
"யாரெல்லாம் பேசுகிறார்கள் சார்" என்றார்.
சரி... இந்த பெயரெல்லாம் சொன்னால், கண்டிப்பாக அவர் பேச மாட்டார் என்று நினைத்து தான் "ரிட்டயர்டு ஜட்ஜ் அரிபரந்தாமன் சார், நம்மளுக்கு மெட்ராஸ்ல கேஸ் நடத்தின லாயர் பாலன் ஹரிதாஸ் சார், டெல்லி லாயர் சபரீஸ் சார், விசிகட்சியின் ஆளூர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ, பிரபல ஊடகவியலாளர் செந்தில்வேல் சார், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் சார், அப்புறம் நம்ம வாஞ்சிநாதன் சார் பேசுறாங்க" என்று கூறிவிட்டு மௌனமானேன்.
"சரி சார் பேசுவோம், நான் பேசுறேன் சார்" என்றார். எனக்கு சந்தோசமும், வியப்பும் ஏற்பட்டதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
ஏனென்றால் அந்த மீட்டிங்கில் பேசப்போகிற தூத்துக்குடியின் பல பகுதிகள் - கிராமங்களை சேர்ந்த மீளவிட்டான் AS முத்து, பூவையா ஆகியோரைத் தவிர குமாரட்டியாபுரம் அ.முருகன், பண்டாரம்பட்டி வசந்தி அம்மா, மடத்தூர் சிம்லா, புதுத்தெரு ஆன்ஸ், பெரியநாயகிபுரம் மணி, இறந்த கிளாஸ்டன் மூத்த சகோதரி பாத்திமாநகர் ஜெனரோஸ், திருநங்கை சகோதரி ரீமா என்ற பியூட்லின், முத்தையாபுரம் சேமா சந்தனராஜ், தாளமுத்து நகரின் ராஜபாளையம் மைக்கேல் உட்பட ஸ்டெர்லைட் எதிர்ப்பு முன்னணியாளர்களில் பலர் இதற்கு முன்பு ஏதாவது ஒரு வகையில் போராட்டக்களத்தில் மீடியாவிலும், சிலர் அவர்களது ஊர் பிரச்சினைகளை சமூக வலைதளங்களிலும் பேசியவர்கள். ஆனால் பூவையா அவர்கள் பேட்டி கொடுக்க, சமூக வலைதளங்களில் பேச தயங்குவார். கூச்சப்படுவார். அவரை பேசுமாறு இதற்கு முன்பு பல நிகழ்வுகளில் கூறும்பொழுது
"நான் ஒரு ஆளுன்னு என்னை பேச சொல்றீங்க" என்பார். அதிமுக அரசு ஆக்ஸிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி கொடுக்க மாவட்டாட்சியர் கருக் கேட்பு கூட்டம் நடத்தினார். எதிர்ப்பு தெரிவிக்க வந்த பூவையா ஆலை திறக்கப்படும் துயரம் கண்டு அழுது கதறியிருப்பார். செய்தி சேனல்களில் அவரை நீங்கள் ஒரு வேளை பாத்திருக்கலாம்.
இதற்கு எதற்கு பூவையாவை பேச வேண்டும்.
காரணம் இது தான்.
அவரது ஊரில் மட்டும்தான் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் பலர் இருக்கிறார்கள். அது வேறு ஒன்றுமில்லை. ஸ்டெர்லைட்டின் பல காண்ட்ராக்டர்கள் அந்த ஊரில் இருக்கிறார்கள். பெரிய தலைக்கட்டுகாரர்கள். அப்படிப்பட்ட ஊரில் தான் குறைவான எண்ணிக்கையில் உள்ளவர்களை பூவையா களத்தில் திரட்டியவர். மே-22 துப்பாக்கி சூடுக்கு இரண்டு மூன்று மாதம் கழித்த பிறகிலிருந்து சமீபகாலம் வரை ஸ்டெர்லைட் நிறுவனம் செடி நடுவது, தையல்மிஷின் பயிற்சி கொடுப்பது, கல்வித்தொகை கொடுப்பது, நோட்டுப் புத்தகங்கள் கொடுப்பது என்ற பெயரில் ஆலையின் அதிகாரிகள், பணிபுரிபவர்கள், ஆதரவாளர்கள் ஆகியோர் ஆட்களைப் பிடிக்க வருவார்கள்.


பூவையா உடனடியாக காவல் துறைக்கும், VAO, RI, தாசில்தார் என தகவல் சொல்வார். "சீல் வச்சி பூட்டுன கம்பெனி உனக்கென்ன ஊருக்குல்ல வேலை?, கொரானா காலத்துல இதுக்கு அனுமதி கொடுத்தது யார்?" என்று கேட்பார். "அரசின் அனுமதி இல்லாமல் எங்க ஊருக்குள்ள வந்து அதக் கொடுக்குறேன், இதக் கொடுக்குறேன்னு வந்திங்கன்னா நடக்குறதே வேற" என்பார்.
"ஊருல மரம் வைக்க இப்ப வந்துட்டீங்களே வெக்கமில்லாம.., 25 வருஷமா எங்கய்யா போனீங்க? இதுவரை ஸ்டெர்லைட்டு கம்பெனியை சுத்தி மரம் வச்சி, பசுமை வளையம் வைக்க துப்பிருக்கா?" என்பார்.
பிரச்சனை ஏற்பட்டு பெரிதாவதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் போய்விடுவார்கள். இதுதான் பூவையா.
ஆதரவாளர்கள் இவருக்கு விலை பேசுவார்கள், போலீஸ் மிரட்டும் (இப்ப இல்ல). "அப்படியா" என்று கேட்டுக்கொள்வார். அசர மாட்டார்.
மே-22 காலை 5.50 க்கு எழும்பி, மற்றவர்களையும் எழுப்பி விட்டு, காலையிலேயே ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளின் பிளக்ஸ் போர்டு கட்டி, நினைவஞ்சலி செலுத்தி, கபசுரக்குடிநீர், முகக்கவசம் வழங்கியுள்ளார்.
அதன் பின் ம.உ.பா.மை ஏற்பாடு செய்த ZOOM மீட்டிங்கிலும் அன்று காலை பேசினார். நல்லா எதார்த்தமாக அனுபவத்தை பகிர்ந்தார்.
"என்னண்ணே... நிகழ்ச்சி எப்படி போச்சு?"
இதெல்லாம் முடிந்த பிறகு அவரிடம் செல்போனில் பேசினேன்.
"சார்... என் கேரக்டர் கிட்டத்தட்ட சங்க தலைவன் படத்தில் வர்ற கருணாஸ் கேரக்டர். என்னால செய்ய முடியாது, மத்தவங்க மாதிரி பேச முடியாது, அதுக்கு நான் சரிப்பட மாட்டேன் (சிரித்தார்), அப்படின்னு தான் நினைப்பேன். சங்கத்தமிழன் படம் பார்த்த கொஞ்ச நேரத்துல நீங்க, இணைய தள மீட்டிங்குக்கு பேச கூப்பிட்டீங்க, ஏன் நம்மளால முடியாது?, இதை ஏன் முடியாதுன்னு சொல்லணும்? முடியும், பேசுவோம்" என்று நினைத்து பேசினேன் என்றார்.
ஒரு திரைப்படமும், அதிலுள்ள கேரக்டர்களும் இப்படி ஒரு பாசிட்டிவ் அப்ரோச்சை அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் ஒருவரை சிந்திக்க வைக்க முடியுமா?
முடிந்திருக்கிறது.
அடுத்து அவரிடம்...
"அண்ணே... இந்த படம் பார்த்த வேகத்துல உடனே போடு கட்டணும், zoom மீட்டிங்ல பேசணும்னு தோணுது"
"ஆமா சார்"
சங்கத் தலைவன் படம் வர்றதுக்கு முன்னாடியே... ஸ்டெர்லைட் போராட்டத்துல துப்பாக்கி சூட்டிற்கு முந்தி மொத ஒரு 100 நாளும், அப்புறம்...
இப்பவரை 3 வருஷ காலமா... ஒங்க ஊருல ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடுறீங்க, அது எப்படீண்ணே? பூவையா அவர்களிடம் கேட்டேன்.
அதற்கு அவர் மிக முக்கியமா ஒன்றை சொன்னார்.
"அதான் சார் தெரியல (மீண்டும் சிரித்தார்)" என்றார்.
அது என்னா...ன்னா
son of soil-ம், Love with Thoothukudi-யும்தான்.
அது தான்... மண்ணின் மைந்தன் என்ற திமிரும்,
தன் தூத்துக்குடி மண்ணின் மீதுள்ள பாசமும்தான்.❤️
சங்கத்தலைவனுக்கும் பங்கிருக்கு...👍





அரிராகவன்









No comments:

Post a Comment