Friday 8 May 2020

டாஸ்மாக்கை மூடச்சொன்ன முதியவர் சிறைக் கொட்டடியில்!


சுமார் இரண்டு மாத காலமாக கரோனாவால் உலகமே முடங்கிக் கிடக்கிறது. தமிழகத்தில் சிறு தொழில் முதல் பெரிய ஆலைகள் வரை அனைத்தும் இயங்கவில்லை. சிறு கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை  மூடப்பட்டுள்ளன. ஒரு பக்கம் வருவாய் இன்றி அடித்தட்டு மக்கள் அல்லல்படுகின்றனர். அத்தியாவசியப் பொருட்கள்கூட கிடைக்காமல் மக்கள் அலைகின்றனர். இப்படி மக்கள் சொல்லொனாத் துயரத்தில் இருக்கும் போது 07.05.2020 முதல் சாராயக் கடைகளைத் திறக்கப் போவதாக எடப்பாடி அரசு அறிவித்தது. கடந்த 40 நாட்களில் குடியை மறந்திருந்த மக்களை “குடிக்க வா!” என அழைப்பு விடுத்தார் எடப்பாடி.
இதற்குத் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன. சாராயக் கடைகளைத் திறக்கக் கூடாது என மக்கள் கடந்த இரண்டு நாட்களாகவே ஆங்காங்கே போராடத் தொடங்கி விட்டனர். சாராயக் கடைகள் திறக்கப்பட்ட 07.05.2020 அன்று தமிழகத்தின் பல்வேறு பகுிதிகளில் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்பினர் அமைதியான முறையில் கரோனா காலத்தில் கடைபிடிக்க வேண்டிய சமூக இடைவெளியைக் கடைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் இராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர் மோகன் மற்றும் 72 வயதான அவரது தந்தை வெங்கடேசன் இருவரும் நெமிலி வட்டம், அவலூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு வாலாசாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அரக்கோணம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இருவர் மீதும் சட்டவிரோதமாகக் கூடியது (143), தடை உத்தரவை மதிக்காமல் நடந்து கொண்டது (188), நோய்த் தொற்றை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டது (269, 270), ஐந்துக்கும் மேற்பட்ட எந்த ஒரு கூட்டத்திலும் தெரிந்தே கலந்து கொண்டது (151) ஆகிய இந்திய தண்டனைச் சட்டம் பிரிகளிலும் அதனுடன் ஒருவரின் சட்டபூர்வ நடவடிக்கையை தடுத்தல் என்கிற குற்றவியல் சட்டத் திருத்தம் பிரிவு 7(1)(a) ன் கீழும் வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது.

பிரிவு 188 ன்கீழ் காவல் துறை நேரடியாக வழக்குப் பதிவு செய்ய முடியாது. மாறாக இந்தப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமானால் 144 தடை உத்தரவு பிறப்பித்த அரசு அதிகாரி புகார் அளித்தால் மட்டுமே காவல்துறை வழக்குப் பதிவு செய்ய முடியும் என சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. சட்டமும் அதைத்தான் சொல்கிறது. ஐந்து பேர் மற்றும் அதற்கு மேல் கூடினால்தான் பிரிவு 151 ஐ பிரயோகிக்க முடியும். ஆனால் இங்கே இரண்டு பேர்தான் போராட்டம் நடத்தி உள்ளனர். பிறகு எப்படி 151 வரும் என்பது ஒரு எளிய பாமரனுக்கும் புரியும்தானே! அடிப்படையில் 143, 151, 188 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுத்ததே அடிமுட்டாள்தனமானது.

மேற்கண்ட பிரிவுகளின் கீழ் ஒரு வேளை குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கினால் அதிகபட்சம் 2 ஆண்டுகள் மட்டும்தான் வழங்க முடியும். ஆனால் அர்னேஷ் குமார் வழக்கில் 7 ஆண்டுகளுக்கு மிகாமல் தண்டனை வழங்கக்கூடிய வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவரை நீதிமன்றக் காவலில் வைக்கக் கூடாது; அதாவது சிறையில் அடைக்கக்கூடாது என்ற வரலாற்று சிறப்புமிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் குற்றவியல் நடுவர்கள் மதிப்பதில்லை.

சட்டத்தின்படியும், கரோனா நோய்த் தீவிரமாகப் பரவி வரும் இன்றைய சூழலையும் கணக்கில் கொண்டு இருவரையும் குற்றவியல் நடுவரே சொந்த முறையில் பிணையில் விடுதலை செய்திருக்க வேண்டும். மேலும் நீதிமன்றக் காவலில் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வழக்கறிஞர்கள் முயன்றபோது கரோனா கட்டுப்பாடு இருப்பதாகக்கூறி நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கவில்லை. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆட்சேபனை மனுவையும் கணக்கில் கொள்ளாமல் எந்திரகதியாக 72 வயது முதியவர் என்றும் பாராமல் சிறையில் அடைத்துள்ளனர்.

கரோனாவை கட்டுப்படுத்துவது அரசின் நோக்கமல்ல. மாறாக சாராயத்தைப் பாதுகாப்பதே நோக்கம் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.

ஊரடங்கு முடியும் வரை சாராயக் கடைகள் திறக்கக்கூடாது என இன்று சென்னை உயர்நீதி மன்றம் சொல்லிவிட்டது. இதைத்தானே மோகனும் வெங்கடேசனும் நேற்று சொன்னார்கள். அதற்காக இருவரும் இன்று சிறைக் கொட்டடியில். பொய் வழக்குப் புனைந்த அவலூர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமிபதியும், கண்ணை மூடிக் கொண்டு இருவரையும் சிறைக்கு அனுப்பிய வாலாசாப்பேட்டை குற்றவியல் நீதிபதியும் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

2 comments:

  1. சட்டம் தெரியாத போலிஸ்யும், தீர விசாரிக்க நேரமில்லாத நீதிபதியும், இந்நாட்டில் இருந்தால் இனி, அனைத்து
    போராடும் பாமரர்களும் சிரைச்சாலைக்கு தான் செல்ல வேண்டும்.!

    புகழேந்தி வில்சன்...//

    ReplyDelete
    Replies
    1. ஆம். வருகைக்கு நன்றி.

      Delete